அமீரகக் கொடியை அவமதித்தால் 25 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 500,000 திர்ஹம்ஸ் அபராதம்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசியக் கொடியை எந்த வகையிலும் தவறாகவோ அல்லது தேசியக் கொடியை அவமதிக்கும் நோக்கிலோ ஈடுபடும் நபர்களுக்கு 25 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், 500,000 திர்ஹம் அபராதமும் உட்பட கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகக் கொடியை பகிரங்கமாக அல்லது எந்தவொரு பொது இடத்திலோ அல்லது பொதுமக்களுக்காக திறக்கப்பட்ட இடத்திலோ யார் அவமதித்தாலும் அபராதம் விதிக்கப்படும் என்று ஐக்கிய அரபு அமீரகத்தின் பொது வழக்குகள் துறை சமூக ஊடகத்தில் வெளியிட்ட விழிப்புணர்வு செய்தியில் விளக்கியுள்ளது.
யூனியன் கொடி மற்றும் அதன் திருத்தங்கள் குறித்த 1971 ஆம் ஆண்டின் பெடரல் சட்டம் எண் 2 இன் பிரிவு (3), யூனியன் கொடியை சேதப்படுத்தவோ அல்லது எந்த வகையிலும் அவமதிக்கும் எவருக்கும் 10 வருடங்களுக்கும் குறையாத மற்றும் 25 வருடங்களுக்கு மிகாமல் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், சிறைத்தண்டனையுடன் சேர்த்து கூடுதலாக, நாட்டின் கொடியை அவமதித்த குற்றவாளி எனக் கருதப்படும் நபருக்கு குறைந்தபட்சம் 500,000 திர்ஹம் அபராதமும் விதிக்கப்படும் என்றும் சட்டம் கூறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமீரக கொடியை அவமதிக்கும் எவருக்கும் இதே தண்டனை வழங்கப்படும் என்று அரசு வக்கீல்கள் பொதுமக்கள் அனைவருக்கும் தெரிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.