அபுதாபி: 30 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்து… 19 பேர் காயமடைந்ததாக தகவல்..!!
அபுதாபியில் இன்று (வெள்ளிக்கிழமை) அல் ஜாஹியா பகுதியில் திடீரென பெரும் தீவிபத்து ஏற்பட்டிருந்த நிலையில் தற்பொழுது இந்த தீ விபத்தில் 19 பேர் காயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த விபத்தில் காயமடைந்த 19 பேருக்கும் காயங்கள் லேசானது முதல் மிதமானது வரை இருப்பதாகவும், மேலும் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அல் ஜாஹியா பகுதியில் உள்ள 30 மாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டதால், விபத்திற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கட்டிடத்தில் இருந்து குடியிருப்பு வாசிகள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர். அத்துடன் தீயை அணைக்க அதிகாரிகள் தொடர்ந்து பணியாற்றி வருவதாக அபுதாபி காவல்துறை செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் தீ விபத்துக்கான காரணத்தை கண்டறியும் முயற்சியிலும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையில் விபத்து குறித்து உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்றும், அதிகாரப்பூர்வ ஆதாரங்களை மட்டுமே சரிபார்க்கவும் என்று காவல்துறை பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது. இதே போன்று சமீபத்தில் அபுதாபியில் உள்ள உணவகத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் 2 பேர் உயிரிழந்ததுடன் 100 க்கும் மேற்பட்டவர்கள் காமடைந்ததும் குறிப்பிடத்தக்கது.