துபாயின் துணை ஆட்சியாளர் மறைவு..!! 3 நாட்கள் விடுமுறை.. 10 நாட்கள் துக்கம் அனுசரிப்பு..!!
துபாயின் துணை ஆட்சியாளரும் ஐக்கிய அரபு அமீரகத்தின் நிதி அமைச்சருமான மாண்புமிகு ஷேக் ஹம்தான் பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் இன்று மரணமடைந்ததாக துபாய் ஆட்சியாளர் அறிவித்துள்ளார். கிட்டத்தட்ட ஐந்து தசாப்தங்களாக நிதி மற்றும் தொழில் அமைச்சராகவும், துபாயின் துணை ஆட்சியாளராகவும் பணியாற்றிய ஷேக் ஹம்தான் பின் ரஷீத் அல் மக்தூம் காலமானது ஐக்கிய அரபு அமீரகத்திற்கும், குறிப்பாக துபாய்க்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். இவரே உலகின் மிக நீண்ட ஆண்டு காலமாக நிதி அமைச்சராக பணியாற்றியவர் ஆவார்.
Video: @HamdanMohammed and @MaktoumMohammed carry the body of the late Sheikh Hamdan bin Rashid Al Maktoum to his final resting place in Umm Hurair cemetery in Dubai. pic.twitter.com/eBiPuZOREn
— Dubai Media Office (@DXBMediaOffice) March 24, 2021
ஷேக் ஹம்தான் மறைவைத் தொடர்ந்து துபாயில் நாளை முதல் 3 நாட்கள் அரசுத்துறை மற்றும் நிறுவனங்களில் வேலை நிறுத்தி வைக்கப்படும் எனவும் இன்று முதல் 10 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்பட்டு அமீரக தேசிய கொடியானது அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 4, 1995 இல் துபாயின் துணை ஆட்சியாளராக நியமிக்கப்பட்ட மாண்புமிகு ஷேக் ஹம்தான் தனது முன்மாதிரியான நடைமுறை, தெளிவு மற்றும் தொலைநோக்குத் தலைமை ஆகியவற்றால் தனது தனித்துவமான அடையாளத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். ஷேக் ஹம்தான் மறைவை தொடர்ந்து தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஷேக் ஹம்தானின் உடலானது உம் ஹுரைர் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த இறுதி சடங்கில் துபாயின் மகுட இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம், துணை ஆட்சியாளர் ஷேக் மக்தூம் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், இன்று மஹ்ரிப் தொழுகைக்குப் பிறகு அமீரகம் முழுவதும் ஷேக் ஹம்தான் மறைவிற்கு ஜனாஸா தொழுகை நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.