இந்தியா, இலங்கையிலிருந்து அபுதாபிக்கு ஆகஸ்ட் 10 முதல் விமான சேவை துவங்கும்..!! எதிஹாட் ஏர்வேஸ் அறிவிப்பு..!!
அமீரக அரசால் விதிக்கப்பட்டிருந்த பயண தடை நீக்கிக்கொள்ளப்பட்டதை தொடர்ந்து இந்தியா, இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கும் அபுதாபிக்கும் இடையேயான விமான சேவை வரும் ஆகஸ்ட் 10 முதல் மீண்டும் தொடங்கும் என்று ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய விமான நிறுவனமான எதிஹாட் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது.
இந்த நாடுகளிலிருந்து வரும் பயணிகள் அமீரகத்திற்குள் நுழைவதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நேற்று ஆகஸ்ட் 5 முதல் தளர்த்தப்பட்டாலும், அபுதாபிக்கு செல்லும் விமானங்கள் மீண்டும் தொடங்குவதற்கு இன்னும் ஐந்து நாட்கள் ஆகும் என தெரிய வந்துள்ளது.
மேற்கூறிய நாடுகளிலிருந்து வரும் பயணிகள் அபுதாபிக்கு வந்தவுடன், அனைத்து பயணிகளும் 10 நாட்களுக்கு தங்களை வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும், தனிமைப்படுத்தப்பட்ட காலத்தில் அவர்கள் மருத்துவ ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட டிராக்கிங் ரிஸ்ட் பேண்டை அணிந்திருக்க வேண்டும் என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், விமான நிலையம் வந்தடைந்த பயணிகள் இமிகிரேஷன் செயல்முறைகளை முடித்தபின் அபுதாபி விமான நிலையத்தில் இந்த டிராக்கிங் ரிஸ்ட் பேண்ட் அதிகாரிகளால் வழங்கப்படும் என்றும், தனிமைப்படுத்தப்பட்ட காலத்தில் நான்கு மற்றும் எட்டாவது நாட்களில் PCR சோதனை கட்டாயம் எடுக்க வேண்டும் என்றும் விமான நிறுவனம் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.
அபுதாபி பயணிக்க விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள்..
அபுதாபி பயணம் செய்ய அடையாள மற்றும் குடியுரிமைக்கான கூட்டாட்சி ஆணையத்தின் (ICA) ஒப்புதல் அவசியம்.
முதல் விமானம் புறப்படும் நேரத்திற்கு அதிகபட்சமாக 48 மணி நேரத்திற்கு முன் எடுக்கப்பட்ட PCR சோதனையின் எதிர்மறையான முடிவை பயணிகள் வைத்திருக்க வேண்டும். மேலும் அந்த எதிர்மறையான முடிவுகள் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்தில் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். அதன் உறுதி தன்மையை சரிபார்க்க ஒரு QR குறியீடு அதில் இருக்க வேண்டும்.
பயணிகள் அனைவரும் விமானத்தில் ஏறுவதற்கு நான்கு மணி நேரத்திற்கு முன்னதாக விரைவான கோவிட் -19 சோதனையையும் விமான நிலையத்தில் எடுக்க வேண்டும்.