துபாய்: குடியிருப்பாளர்களுக்கு RTA வெளியிட்டுள்ள அறிவிப்பு!! வாட்சப் மூலம் கட்டணம் செலுத்தலாம்..
துபாயில் உள்ள குடியிருப்பாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, வாகன ஓட்டிகள் தங்களின் பார்க்கிங் டிக்கெட்டுகளுக்கு பிரபல செயலியான வாட்சப் மொபைல் ஆப் மூலம் பணம் செலுத்தலாம் என்று துபாய் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) இணையதளத்தில் அறிவித்துள்ளது. எனவே, இதன் மூலம் ஒரு டிக்கெட்டிற்கு சுமார் 30 பில்ஸ்களை வாகன ஓட்டிகள் சேமிக்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதாவது, 971 58 8009090 என்ற RTA இன் வாட்சப் எண்ணுக்கு மெஸ்சேஜ் அனுப்புவதன் மூலம் பார்க்கிங் கட்டணம் செலுத்துவது எளிதானது என்றும், இதனால் SMS மூலம் பார்க்கிங் செலுத்தும் கட்டணத்தில் 30 ஃபில்ஸ்கள் வரை குடியிருப்பாளர்கள் சேமிக்க முடியும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதுபோல, போக்குவரத்து அபராதம் அல்லது ஓட்டுநர் மற்றும் வாகன உரிமத்திற்கான தேவைகள் குறித்த சந்தேகம் அல்லது கேள்விகள் ஏதேனும் இருந்தால் அதனை தெரிந்துகொள்ளவும் குடியிருப்பாளர்கள் வாட்ஸ்அப் மூலம் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என்றும் RTA கூறியுள்ளது.
வாட்சப் மூலம் பார்க்கிங் போடுவதற்கு வாகன பதிவு எண் <Space> மண்டல எண் <Space> கால அளவு (Plate number <Space> zone number <Space> duration) என்றவாறு வாகனத்தின் விவரங்களை டைப்பிங் செய்து அனுப்ப வேண்டும். அதன்பிறகு, பதிவு செய்யப்பட்ட வாகன ஓட்டிகளின் டிஜிட்டல் வாலட்டில் இருந்து பார்க்கிங் டிக்கெட் கட்டணம் கழிக்கப்படும். மேலும், SMS மூலம் பொது பார்க்கிங் கட்டணத்தை செலுத்தும் வசதியும் தொடர்ந்து நடைமுறையில் இருப்பதாகவும் RTA தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு 2022, மார்ச் 28 ம் தேதி முதல், துபாய் முழுவதும் இலவச பார்க்கிங் வசதிகளை வெள்ளிக்கிழமைகளில் இருந்து ஞாயிற்றுக்கிழமைகளுக்கு மாற்றுவதாக RTA அறிவித்து அதன்படி, பொது விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளைத் தவிர மற்ற நாட்களில் தினமும் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை சுமார் 14 மணி நேரம் பொது பார்க்கிங் இடங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.