அமீரக செய்திகள்

இந்தியா-அமீரகம் பயணத்தடை எதிரொலி: 1 இலட்சம் ரூபாய் வரை உயர்ந்த விமான டிக்கெட் விலை..!!

இந்தியாவில் இருந்து அமீரகம் பயணிக்க ஏப்ரல் 25 முதல் தற்காலிகத் தடை அறிவித்ததைத் தொடர்ந்து ஏப்ரல் 23 மற்றும் 24 ஆகிய இரு தேதிகளில் இந்தியாவில் இருந்து அமீரகம் பயணிப்பதற்கான டிக்கெட் முன்பதிவு செய்ய பயணிகளிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

மேலும், நேற்று இந்த அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து இரவோடு இரவாக 90 சதவீதத்திற்கும் மேலான விமான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து விட்டன.

இந்தியாவைச் சேர்ந்த விமான நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் வலைதளமானது நேற்று முதல் உலகளாவிய செயலிழப்பை சந்தித்துள்ளது. விரைவில் இந்த பிரச்சனை சரி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் இருந்து துபாய்க்கு பயணிகளை ஏற்றிச் செல்லும் விமான நிறுவனமான ஸ்பைஸ்ஜெட், இன்று (ஏப்ரல் 23) மதுரையில் இருந்து துபாய்க்கு பயணிக்க ஏறக்குறைய 1 இலட்சம் ரூபாயை டிக்கெட் விலையாக நிர்ணயித்துள்ளது.

 

அபுதாபியை மையமாக கொண்டு இயங்கும் எதிஹாட் ஏர்வேஸ், 24 ம் தேதி சென்னையில் இருந்து அபுதாபிக்கு பயணிக்க 1,40,000 ரூபாயை (Business Class) கட்டணமாக நிர்ணயித்துள்ளது.

மேலும், ஷார்ஜாவில் இயங்கி வரும் ஏர் அரேபியா விமானத்தில் விமான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டன.

இத்தகைய சூழ்நிலையானது, இந்தியாவில் இருந்து அமீரகம் பயணிக்க முடிவு செய்தவர்கள் மற்றும் விடுமுறைக்காக அமீரகத்தில் இருந்து இந்தியா சென்றவர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

10 நாட்கள் தற்காலிகத் தடைக்குப் பிறகாவது மீண்டும் இந்தியாவில் இருந்து விமான சேவைகள் இயக்கப்படுமா அல்லது இந்த நிலை தொடர்ந்து நீடிக்குமா என்ற அச்சத்திலேயே அனைவரும் உள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!