அமீரகம் மற்றும் இந்தியா பயணம் செய்பவர்களுக்கான நெறிமுறைகள் என்ன.?? ஆபத்தான நாடுகளுக்கான நெறிமுறைகள் என்ன.?? படிப்படியான விளக்கம் உள்ளே..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது பள்ளிகளுக்கு குளிர்கால விடுமுறை என்பதாலும், டிசம்பர் மாதத்தில் அமீரகத்தில் குளிர்கால சீசன் என்பதாலும் அமீரகத்திலிருந்து இந்தியாவிற்கும், இந்தியாவிலிருந்து அமீரகத்திற்கும் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை இம்மாதத்தில் பெருமளவு உயரும். அவ்வாறு நீங்களும் இந்தியாவிற்கு பயணம் செல்லவோ அல்லது அங்கிருந்து அமீரகத்திற்கு வரவோ திட்டமிட்டிருந்தால், நீங்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகைளை பற்றி இங்கே படிப்படியாக காணலாம்.
கொரோனாவின் புதிய மாறுபட்ட வைரஸான ஓமிக்ரான் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உலகெங்கிலும் உள்ள நாடுகள் அவர்களின் பயண வழிகாட்டுதல்களைப் புதுப்பித்துள்ளது. அதன்படி ஓமிக்ரான் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இந்தியா வரும் பயணிகளுக்கான வழிகாட்டுதல்களை புதுப்பித்து இந்தியாவின் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் (MOHFW) புதிய நெறிமுறைகளை நவம்பர் 30 அன்று வெளியிட்டிருந்தது.
மேலும் திட்டமிடப்பட்ட சர்வதேச விமானங்களுக்கான பயணத்தடையை இந்த மாதத்திலிருந்து நீக்குவதாக அறிவித்திருந்த இந்திய அரசு, இதன் காரணமாக 2022 ஜனவரி மாதம் இறுதி வரை பயணத் தடையை மீண்டும் நீட்டித்துள்ளது. இருப்பினும் ஐக்கிய அரபு அமீரகமும் இந்தியாவும் விமானப் பயண ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதால், பயணிகள் இரு நாடுகளுக்கும் இடையே பயணம் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
டிசம்பர் 1, 2021 முதல் நடைமுறைக்கு வந்துள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி, பாதிப்புகள் அதிகம் உள்ள நாடுகள் என்று பட்டியலிடப்பட்டுள்ள சிவப்பு பட்டியலில் இருக்கும் குறிப்பிட்ட நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் பயணிகளுக்கு சிறப்பு தனிமைப்படுத்தல் மற்றும் மரபணு சோதனை செய்யப்படவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர மற்ற நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கும் கொரோனா சோதனை உள்ளிட்ட சில புதுப்பிக்கப்பட்ட நெறிமுறைககளை குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அமீரகத்திலிருந்து இந்தியாவிற்கு பயணம் செய்கிறீர்கள் என்றால் நீங்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள்:
1. உங்கள் விமானம் புறப்படும் நேரத்திற்கு 72 மணி நேரத்திற்கு முன் PCR பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். ஏர் சுவிதா படிவத்தை பூர்த்தி செய்யும் போது இந்த சோதனையின் எதிர்மறையான முடிவை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
2. இந்தியா செல்ல திட்டமிடப்பட்ட பயணத்திற்கு முன் (கடந்த 14 நாட்கள் நீங்கள் பயணம் செய்த நாடுகளின் பயண விவரங்கள் உட்பட) சுய-அறிவிப்பு படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
3. விமான நிலையம் வந்தடையும் பயணிகளில் இரண்டு சதவீத பயணிகளின் சீரற்ற மாதிரி PCR பரிசோதனையை எடுக்கும்படி கேட்கப்படும். அவர்கள் நேர்மறை சோதனை முடிவை பெற்றால் அவர்களின் மாதிரி மரபணு சோதனைக்கு அனுப்பப்படும் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட நெறிமுறையின்படி சிகிச்சை பின்பற்றப்படும்.
4. சோதனை முடிவு எதிர்மறையாக இருந்தால், அவர்கள் 14 நாட்களுக்கு தங்கள் உடல்நிலையை சுயமாக கண்காணிக்கும்படி கேட்கப்படுவார்கள். (ஒவ்வொரு மாநிலத்தின் தேவைகளின் அடிப்படையில், வருகையின் போது மேற்கொள்ளப்படும் PCR சோதனைக்கு நீங்கள் பணம் செலுத்த வேண்டியிருக்கலாம்)
இந்தியாவிலிருந்து அமீரகத்திற்கு பயணம் செய்கிறீர்கள் என்றால் நீங்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள்:
1. நீங்கள் அமீரக குடியிருப்பாளராக இருந்தால், இந்தியாவிலிருந்து பயணம் செய்வதற்கு முன்பாக GDRFA அல்லது ICA ஒப்புதலுக்கு விண்ணப்பிக்க வேண்டும். அதுவே நீங்கள் அமீரகத்திற்கு சுற்றுலா விசாவில் வருபவராக இருந்தால் GDRFA அல்லது ICA ஒப்புதல் தேவையில்லை.
2. அங்கீகரிக்கப்பட்ட சுகாதார நிலையத்திலிருந்து 48 மணி நேரத்திற்குள் நடத்தப்பட்ட சோதனைக்கான, QR குறியீட்டைக் கொண்ட செல்லுபடியாகும் எதிர்மறையான கோவிட் 19 PCR சான்றிதழை வைத்திருக்க வேண்டும். கோவிட் 19 PCR சான்றிதழின் செல்லுபடி காலம் புறப்படுவதற்கு முன் மாதிரி சேகரிக்கப்பட்ட நேரத்திலிருந்து கணக்கிடப்படும்.
3. விமான நிலையத்தில் விமானம் புறப்படும் நேரத்திலிருந்து ஆறு மணி நேரத்திற்குள் நடத்தப்பட்ட சோதனைக்கான QR குறியீட்டுடன் கூடிய ரேபிட் PCR சோதனை அறிக்கை வைத்திருக்க வேண்டும்.
ஆபத்தான நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு பயணம் செய்பவர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள்:
>> ஆபத்தான நாடுகளில் இருந்து வரும் பயணிகள் வருகைக்கு பிந்தைய கோவிட்-19 சோதனைக்கான மாதிரியை வந்து சேரும் விமான நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அத்தகைய பயணிகள் வருகை விமான நிலையத்தில் சோதனை முடிவுகளுக்காக காத்திருக்க வேண்டும். சோதனை முடிவுக்கு பின்னரே அவர்கள் விமான நிலையத்தை விட்டு வெளியேற முடியும் அல்லது ட்ரான்சிட் விமானத்திற்கு செல்ல முடியும்.
>> விமான நிலைய சோதனை முடிவு நெகட்டிவ் எனில், ஏழு நாட்களுக்கு வீட்டுத் தனிமைப்படுத்தலைப் பின்பற்றுவார்கள். இந்தியாவிற்கு வந்த 8 ஆம் நாளில் மறுபரிசோதனை செய்யப்படும், அதில் சோதனை முடிவு எதிர்மறையாக இருந்தால், அடுத்த ஏழு நாட்களுக்கு அவர்களின் உடல்நிலையை மேலும் சுய கண்காணிப்பு செய்ய வேண்டும்.
>> விமான நிலைய சோதனை முடிவு பாசிட்டிவ் எனில், அத்தகைய பயணிகளின் மாதிரிகள் இந்திய SARS-CoV-2 ஜெனோமிக்ஸ் கூட்டமைப்பு (INSACOG) ஆய்வக நெட்வொர்க்கில் உள்ள ஆய்வகங்களில் ஒன்றில் மரபணு சோதனைக்காக அனுப்பப்படும்.
>> பாசிட்டிவ் முடிவை பெற்ற பயணிகள் தனித்தனி தனிமைப்படுத்தும் வசதியில் நிர்வகிக்கப்பட்டு, தொடர்புத் தடமறிதல் உட்பட நிர்ணயிக்கப்பட்ட நிலையான நெறிமுறைகள் பின்பற்றப்படும்.
>> பாசிட்டிவ் முடிவை பெற்ற பயணிகளுடன் தொடர்பில் இருந்த மற்ற பயணிகள் நிறுவன தனிமைப்படுத்தலின் கீழ் அல்லது வீட்டுத் தனிமைப்படுத்தலின் கீழ் வைக்கப்பட்டு, அதற்கான நெறிமுறையின்படி சம்பந்தப்பட்ட மாநில அரசாங்கத்தால் கண்காணிக்கப்படும்.
இந்தியாவின் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டிருந்த சமீபத்திய வழிகாட்டுதல்களின்படி, ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வருகைக்கு முந்தைய மற்றும் பிந்தைய PCR பரிசோதனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், விமான நிலையம் வந்திறங்கும்போது அவர்கள் கோவிட்-19 நோய்க்கான அறிகுறிகளை கொண்டிருந்தாலோ அல்லது வீட்டுத் தனிமைப்படுத்தல் காலத்தின் போது அவர்களுக்கு அறிகுறிகள் கண்டறியப்பட்டாலோ, அவர்கள் PCR சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அரசால் வகுக்கப்பட்ட நெறிமுறையின்படி சிகிச்சையளிக்கப்படுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவிற்கு வருகை தரும் பயணிகள், வருகைக்குப் பிந்தைய சோதனை உட்பட கூடுதல் நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டிய சிவப்பு பட்டியலில் உள்ள நாடுகள்:
- ஐரோப்பிய நாடுகள்
- தென்னாப்பிரிக்கா
- பிரேசில்
- போட்ஸ்வானா
- சீனா
- மொரிஷியஸ்
- நியூசிலாந்து
- ஜிம்பாப்வே
- சிங்கப்பூர்
- ஹாங்காங்
- இஸ்ரேல்