ஓமானில் முடிவுக்கு வரும் இயக்கத்தடை..!! பொது இடங்களில் நுழைய தடுப்பூசி போட்டிருப்பது கட்டாயம்..!! புதிய நடைமுறைகளை அறிவித்த அரசு..!!
ஓமானில் கொரோனா பரவுவதைத் தடுக்க மே மாதத்தில் விதிக்கப்பட்ட வணிக நடவடிக்கைகளுக்கான தடையை நீக்குவதாக கொரோனாவிற்கான உச்சக்குழு வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. இது ஆகஸ்ட் 21 சனிக்கிழமை மாலை முதல் அமலுக்கு வரும் என்றும் வணிக, தனிநபர் மற்றும் வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட தடையானது முழுமையாக நீக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் அனைத்து நிலம், கடல் மற்றும் விமான நிலையங்களிலிருந்தும் நாட்டிற்கு நுழையும் பயணிகள் ஓமானில் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியின் இரண்டு டோஸ்களுக்கான தடுப்பூசி சான்றிதழை அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறையானது செப்டம்பர் 1 முதல் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு இது கட்டாயமாக்கப்படும் என்று ஓமான் அரசின் செய்தி நிறுவனம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
கூடுதலாக, ஓமானிற்கு வரும் பயணிகள் நாட்டிற்கு வருவதற்கு முன்போ அல்லது வந்தவுடனோ PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் 7 நாள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு 8 வது நாளில் PCR சோதனையை மீண்டும் செய்ய வேண்டும்.
அத்துடன் ஷாப்பிங் மால்கள், உணவகங்கள் போன்ற பொது இடங்களில் நுழைவதற்கு தடுப்பூசி போட்டிருப்பது கட்டாயம் என்றும் ஓமனில் உள்ள அரசு, தனியார் மற்றும் பொது நிறுவனங்களில் நுழையவும் தடுப்பூசி கட்டாயம் எனவும் அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இந்த கட்டுப்பாடுகளை செயல்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று குழு மேலும் கூறியுள்ளது.
அது மட்டுமல்லாமல், முக கவசம்அணிவது மற்றும் குடியிருப்புகள், பணியிடங்கள் மற்றும் பொது இடங்களில் உடல் ரீதியான சமூக தூரத்தை பராமரிப்பது உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அமைத்துள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கடைபிடிக்குமாறு உச்ச குழு அனைத்து மக்களையும் வலியுறுத்தியுள்ளது.