துபாய்: வீட்டு தனிமைப்படுத்தலை மீறி காஃபி ஷாப்பிலிருந்து வீடியோ வெளியிட்ட இளைஞர்.. 50000 திர்ஹம்ஸ் அபராதம் விதித்த காவல்துறை..!!
கொரோனாவிற்கான வீட்டு தனிமைப்படுத்தல் விதிகளை மீறி, காஃபி ஷாப்பில் ஒரு கப் காஃபியை வைத்திருப்பதை காட்டும் வீடியோவை வெளியிட்ட கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் துபாயில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொரோனாவிற்கான வீட்டு தனிமைப்படுத்தலுக்கான விதிமுறைகளை மீறியதற்காக அந்த நபருக்கு 50,000 திர்ஹம்ஸ் அபராதமும் வழங்கப்பட்டுள்ளதாக துபாய் காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து துபாய் காவல்துறையின் குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) இயக்குனர் பிரிகேடியர் ஜமால் சேலம் அல் ஜல்லாஃப் கூறுகையில், விதிமீறலில் ஈடுபட்ட அந்த இளைஞர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, மேலும் அவர் மீண்டும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்று கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில், “அவர் வீட்டு தனிமைப்படுத்தலுக்கான சட்டங்களை மீறியது மட்டுமல்லாமல், அவர் தனது பொறுப்பற்ற தன்மையைப் பற்றி வேண்டுமென்றே தற்பெருமை காட்டும் விதமாக சமூக ஊடக தளங்களில் ஒரு வீடியோவை வெளியிட்டார். அவரது பொறுப்பற்ற நடவடிக்கை மற்றவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்க தூண்டியது” என பிரிக். அல் ஜல்லாஃப் குறிப்பிட்டுள்ளார். மேலும் வீட்டு தனிமைப்படுத்தப்பட்ட வழிமுறைகளை மீறுவது 50,000 திர்ஹம்ஸ் அபராதத்துடன் தண்டிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் சைபர் கிரைம் சட்டத்தின் 31 வது பிரிவின்படி, அமீரகத்தின் சட்டங்களையும் விதிகளையும் மீறுவதை ஊக்குவிப்பது தொடர்பான தகவல்களை வெளியிடுவதற்கு சிறைத்தண்டனை மற்றும் 200,000 திர்ஹம்ஸ் முதல் 1 மில்லியன் திர்ஹம்ஸ் வரை அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.