UAE: ஃபெராரி வேர்ல்ட் தீம் பார்க் மேற்கூரையில் சென்று பார்க்க விருப்பமா.. புதிய அனுபவங்களை பெற ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்..!!
அபுதாபியின் யாஸ் தீவில் அமைந்துள்ள உலகப் புகழ் பெற்ற ஃபெராரி வேர்ல்ட் தீம் பார்க் (Ferrari World Abu Dhabi) நேற்று (நவம்பர் 4) முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. கொரோனாவின் பாதிப்பினால் கடந்த சில மாதங்களாக ‘ஃபெராரி வேர்ல்ட் அபுதாபி’ தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. யாஸ் தீவில் அமைந்திருக்கும் இந்த தீம் பார்க்கின் மேற்கூரையானது ஃபெராரியின் குதிரை சின்னத்துடன் 200,000 சதுர மீட்டர் அளவில் பறந்து விரிந்திருக்கும் என்பதும், மேலும் இது விண்ணில் இருந்து தெரியக்கூடிய ஐக்கிய அரபு அமீரக அடையாள சின்னங்களில் ஒன்றாகும் என்பதும் இதன் சிறப்பம்சமாகும்.
பல மாதங்களுக்கு பிறகு இன்று திறக்கப்பட்டிருக்கும் ஃபெராரி வேர்ல்ட் அபுதாபி தீம் பார்க்கில் இதுவரையிலும் உள்ளே இருக்கும் ரைடுகளின் அனுபவங்களை பெற்று வந்த பார்வையாளர்கள் இனிமேல் பார்க்கின் மேற்கூரையின் மேலும் நடக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஃபெராரி வேர்ல்ட் அபுதாபியானது தொடங்கப்பட்டு தற்பொழுது 10 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு, 10 வது ஆண்டு கொண்டாட்டத்தை இன்னும் சிறப்பாக்கி வைக்கும் விதமாக ஃபெராரி வேர்ல்ட் அபுதாபியின் மேற்கூரையில் சென்று பார்க்க தொடங்கப்பட்டுள்ளது. இந்த மேற்கூரையில் நடப்பதன் மூலம் பார்வையாளர்கள் ஒரு தனித்துவமான அனுபவத்தை பெற முடியும் எனவும், யாஸ் தீவின் சிறந்த காட்சிகளை காணலாம் எனவும் கூறப்பட்டுள்ளது
மேலும் இதனுடன் ஃபெராரி வேர்ல்ட்டில் இந்த வருடம் புதியதாக zip line adventure எனும் சாகசம் ஒன்றும் துவங்கப்பட்டுள்ளது. உலகின் மிக உயர்ந்த ரோலர் கோஸ்டர் லூப் அமைந்திருக்கும் இந்த தீம் பார்க்கில் கூடுதலாக சேர்க்கப்பட்டிருக்கும் zip line adventure பார்வையாளர்களுக்கு கூடுதல் சிறப்பம்சத்தை தரும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து ஃபெராரி வேர்ல்ட் அபுதாபியின் பொது மேலாளரும், யாஸ் தீம் பூங்காக்களின் செயல் தலைவருமான பியான்கா சம்முத் கூறுகையில், “புதிய ரைடுகள் ஃபெராரி வேர்ல்ட் பூங்காவில் உற்சாகமான செயல்பாடுகளை நிறைவு செய்கின்றன. உலகளவில் சாதனை படைக்கும் ரைடுகள், காட்சிகள் மற்றும் உலகெங்கிலும் உள்ள விருந்தினர்களுடன் விலைமதிப்பற்ற நினைவுகள் ஆகியவற்றை நாங்கள் பிரதிபலிக்கிறோம்” என்று சம்முத் கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், பூங்காவிற்கு வரும் பார்வையாளர்கள் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும் எனவும் இன்று (வியாழக்கிழமை) முதல் புதிய ரைடுகளின் அனுபவங்களை பெறமுடியும் எனவும் தெரிவித்துள்ளார்.