அமீரகத்தின் எந்த பகுதிகளில் இன்று மழை பெய்ய வாய்ப்பு..?? NCM வெளியிட்ட தகவல்….
ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM), அபுதாபியின் அல் தஃப்ரா, அல் வத்பா, அல் அய்ன் மற்றும் கிழக்கு மற்றும் வடக்கு எமிரேட்டுகளான ஃபுஜைரா, ராஸ் அல் கைமா மற்றும் உம் அல் குவைன் ஆகிய நகரங்களில் இன்று மற்றும் நாளை (பிப்ரவரி 28, 29) இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.
அதேசமயம், துபாய் மற்றும் ஷார்ஜா உட்பட நாட்டின் பிற பகுதிகளில் மேகமூட்டமான வானிலை நிலவும் என்றும், சில சமயங்களில் லேசான மழை பெய்யக் கூடும் என்றும் மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஊடகங்களிடம் பேசிய NCMஇன் வானிலை ஆய்வாளர் மரியம் அல்ஷாஹி, காலையில் மேகமூட்டமான வானிலை இருக்கும் என்றும், நாட்டின் மேற்குப் பகுதியில், முக்கியமாக அல் தஃப்ராவில் லேசான மழை பெய்யும் என்றும் கூறியுள்ளார். அத்துடன் மேகங்கள் படிப்படியாக அல் வத்பா மற்றும் அல் அய்ன் நோக்கி நகரும் என்பதால், இன்று மதியம் 3 மணிக்கு மேல், இப்பகுதிகளில் அதிக மேகங்கள் உருவாகும் மற்றும் மிதமான மழை பெய்யும் என்று விளக்கியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து இன்றிரவு மற்றும் நாளை அதிகாலையில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று அவர் மேலும் கூறியுள்ளார். NCM வெளியிட்ட முன்னறிவிப்பின் படி, நாளை நண்பகல் வரை லேசானது முதல் மிதமான காற்று வீசக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, கடல் மற்றும் கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் சில நேரங்களில் தூசி மற்றும் மணல் புயல் ஏற்படலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, அரேபிய வளைகுடாவில் வியாழன் அன்று கடல் ஓரளவு சீற்றத்துடனும், ஓமான் கடலில் வியாழன் இரவு சிறிது முதல் மிதமாகவும் மற்றும் சீற்றத்துடனும் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து வெள்ளிக்கிழமை பகல் நேரத்தில் சில கிழக்குப் பகுதிகளில் மழையை உண்டாக்கக்கூடிய வெப்பச் சலன மேகங்கள் கூடும் என்றும் NCM வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. வானிலை ஆய்வாளரின் கூற்றுப்படி, திரளான வெப்பச்சலன மேகங்கள் கண்காணிக்கப்பட்டால் அப்பகுதியில் கிளவுட் சீடிங் நடத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel