அமீரகத்தின் பல பகுதிகளில் இன்று கொட்டி தீர்த்த மழை..!! குடியிருப்பாளர்கள் மகிழ்ச்சி..!!
ஐக்கிய அரபு அமீரகத்தின் பல பகுதிகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) பலத்த மழை பெய்துள்ளதாக தேசிய வானிலை மையம் (NCM) தெரிவித்துள்ளது. மழை பெய்ததையடுத்து அமீரகவாசிகள் பலரும் மழை பெய்த வீடியோவை தங்களது சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
தேசிய வானிலை ஆய்வு மையமானது துபாயின் தேரா, அல் அவீர், நாத் அல் ஷீபா, அல் கவானீஜ், துபாய் இன்டர்நேஷனல் அகாடமிக் சிட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழையையும், துபாய் மற்றும் ஷார்ஜா சர்வதேச விமான நிலையங்களில் லேசானது முதல் கனமழையையும், அஜ்மான், அபுதாபி மற்றும் உம் அல் குவைனில் மிதமான மழையையும் பதிவு செய்ததாக தெரிவித்துள்ளது.
அதிலும் குறிப்பாக சில இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கியிருப்பதால் அப்பகுதிகளில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
அத்துடன் NCM இன்று பிற்பகல் துபாய் மற்றும் அஜ்மானுக்கு புதிய ஆரஞ்சு எச்சரிக்கைகளை வெளியிட்டிருந்தது. இந்த பகுதிகளில் மோசமான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதால், குடியிருப்பாளர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. மேலும், திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பகுதிகளில் இருந்து விலகி இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
துபாய் மற்றும் அபுதாபியில் உள்ள அதிகாரிகள் மழை காரணமாக வாகன ஓட்டிகள் விபத்துகளைத் தடுக்க எச்சரிக்கையுடன் செயல்படுமாறும் மழைக் காலநிலையில் கவனமாகவும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேக வரம்பை மீறாமலும் வாகனம் ஓட்டுமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.