அமீரகத்தில் இன்று மூடுபனி எச்சரிக்கை விடுத்த தேசிய வானிலை மையம்..!!
துபாய், ஷார்ஜா மற்றும் அபுதாபியின் சில பகுதிகளில் இன்று மூடுபனி எச்சரிக்கையை அமீரகத்தின் தேசிய வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும் இன்று காலை 9.30 மணிக்கு பின் இந்த மூடுபனி குறையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக வாகனம் ஓட்டுமாறும் மேலும் வேகத்தை குறைத்துக்கொண்டும் முன் செல்லும் வாகனங்களுக்கு போதிய இடைவெளி விட்டும் ஓட்டுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தேசிய வானிலை ஆய்வு மையத்தின் (NCM) கூற்றுப்படி, அமீரகத்தின் சில பகுதிகளில் வெப்பநிலை திங்கள்கிழமை அதிகபட்சமாக 35ºC ஆக பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அபுதாபி மற்றும் துபாயில் முறையே 18 டிகிரி செல்சியஸ் மற்றும் 17 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
அத்துடன் அமீரகத்தில் பொதுவாக சில பகுதிகளில் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் பகலில் தென்கிழக்கு திசையிலிருந்து வடமேற்கு திசையில் மணிக்கு 10 முதல் 20 கிமீ வேகத்திலும் சில நேரங்களில் 30 கிமீ வேகத்திலும் காற்று வீசக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.