ADVERTISEMENT

கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை மீறினால் கடும் தண்டனை..!!! துபாய் காவல்துறை எச்சரிக்கை..!!!

Published: 25 Mar 2020, 8:23 AM |
Updated: 25 Mar 2020, 8:30 AM |
Posted By: jesmi

ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் தற்பொழுது “StayHome” என்பதை வலியுறுத்தி அனைத்து மக்களையும் வீட்டிலேயே இருக்க அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், “StayHome” என்ற தேசிய பிரச்சாரத்தில் தனது அலட்சியத்தைக் காட்டும் வீடியோவை வெளியிட்டதற்காகவும், அதிகாரிகளின் சமூக இடைவெளி (social distance) வழிமுறைகளை மீறுவதற்கு மக்களை ஊக்குவித்ததற்காகவும் அரபு வம்சாவளியைச் சேர்ந்த ஒரு ஐரோப்பிய நாட்டவரை துபாய் காவல்துறை கைது செய்துள்ளது. அவர் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கு பொது வழக்கு விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் துபாய் காவல்துறை தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

பொது சுகாதாரத்தைப் பாதுகாக்க அதிகாரிகள் பிறப்பித்த கட்டளைகளை பொதுமக்கள் அனைவரும் முழுமையாக பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை துபாய் காவல்துறை பலமுறை வலியுறுத்தியுள்ளது.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து, பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு இணங்காத நபர்களுக்கு சிறைதண்டனை மற்றும் 2,00,000 முதல் 1 மில்லியன் திர்ஹம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று காவல்துறை தற்பொழுது தெரிவித்துள்ளது.

முன்னதாக, கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு பிறகு அனைத்து பீச், பார்க் போன்ற பொது இடங்களை மூட உத்தரவிட்டதன் பின், பீச்சிற்கு வருகை தருவதைக் காட்டும் வீடியோவை வெளியிட்டதற்காக பீச் சென்ற ஒருவரை காவல்துறையினர் கைது செய்திருந்தனர். இது போலீஸ் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சமூக ஊடகங்கள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கிய அறிவுறுத்தல்களை மீறிய குற்றமாகும்.

ADVERTISEMENT

இது பற்றி துபாய் காவல் துறை கூறுகையில், உள்ளூர் மற்றும் கூட்டாட்சி சட்டங்களையும், பாதுகாப்பு அதிகாரிகள் வழங்கிய அறிவுறுத்தல்களையும் மீற வேண்டாம் என்று அனைவருக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இந்த நடவடிக்கைகளை மீறுபவர் மீது சட்டப்படி தண்டனை கொடுக்கப்படும் என்றும் கூறியுள்ளது.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வழங்கிய தெளிவான அறிவுறுத்தல்கள், சட்டங்கள் மற்றும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு துபாய் காவல்துறை பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது. இந்த சட்டங்களை கடைபிடிக்க மறுப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவற்றை மீறும் எவரும் பொறுப்பற்றவர்கள் என்றும் கூறியுள்ளது. இந்த சமூகத்தில் வாழக்கூடிய அனைவரின் பாதுகாப்பு மற்றும் ஆதரவிற்கு ஆபத்தை விளைவிக்கும் எவரையும் இந்த சட்டத்தின் மூலம் கண்டிப்பாகத் தண்டிக்கப்படுவார்கள் என்றும் காவல் துறை கூறியுள்ளது.

சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் போது ஒட்டுமொத்த சமூகமும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று துபாய் காவல்துறை அழைப்பு விடுத்ததுடன், அச்சம், பீதி மற்றும் அசவுகரியத்தை ஏற்படுத்தும் அதிகாரிகள் வழங்கிய அறிவுறுத்தல்களை மீறவோ, வதந்திகளை பரப்பவோ வேண்டாம் என்றும் துபாய் காவல்துறை எச்சரித்துள்ளது.