UAE: காலாவதி தேதிக்கு முன்பு லைசென்ஸ் பிளேட்டை புதுப்பிக்க வேண்டும்! – உரிமையாளர்களுக்கு நினைவூட்டிய காவல்துறை…
ஐக்கிய அரபு அமீரகத்தின் வடக்கு எல்லையில் அமைந்துள்ள ராஸ் அல் கைமா காவல்துறை வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து விதிமீறல்களுக்கான தண்டனை குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. நகரில் வாகனத்தின் லைசென்ஸ் பிளேட்டுகளை புதுப்பிக்காமல் இருக்கும் உரிமையாளர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் குறித்து வாகன ஓட்டிகளுக்கு காவல்துறை நினைவூட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதன் படி, ஒரு வாகனத்திற்கான காப்பீடு, உரிமம் போன்றவை அவற்றின் காலாவதி தேதிக்கு நாற்பது நாட்களுக்கு முன்னதாக புதுப்பித்திருக்க வேண்டும். விதியை மீறுபவர்களுக்கு 500 திர்ஹம் அபராதமும் 4 கருப்பு புள்ளிகளும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முதல் அபராதத் தொகை செலுத்திய பின்னரும், இரண்டு வாரத்திற்குள் ஆவணங்களை புதுப்பிக்கவில்லையெனில் மீண்டும் மற்றொரு அபராதம் விதிக்கப்படும் என்று கூறியுள்ளது.
அதேசமயம், மூன்று மாதங்கள் கடந்தும் புதுப்பிக்கப்படாமல் இருந்தால், ஏழு நாட்களுக்கு பறிமுதல் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் சாலையில் காலாவதியான உரிம எண்களைக் கொண்டிருக்கும் வாகனங்களை எளிதில் கண்டறிய RAK காவல்துறை சிறப்பு ரேடார் அமைப்பினை கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். ஆகையால் வாகனத்திற்கு உரிய ஆவணங்களை புதுப்பிக்க வேண்டும் என்று உரிமையாளர்கள் நினைவில் வைத்துக்கொள்வது சிறந்தது ஆகும்.