முதலாளி சம்பளத்தை தராமல் இழுத்தடித்தால் வீட்டு தொழிலாளர்கள் இனி இப்படி செய்யலாம்!! விதிகளை நினைவூட்டிய சவூதி…!!
சவூதி அரேபியாவின் மனித வளங்கள் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் (MHRSD) வீட்டு தொழிலாளர்களுக்கான ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, சவூதியில் வீட்டு வேலை செய்பவர்கள் சம்பளம் பெறுவதில் தாமதம் ஏற்பட்டாலோ அல்லது வேறு சில காரணங்களுக்காகவோ தங்களின் தற்போதைய முதலாளிகளின் அனுமதியின்றி தங்கள் ஸ்பான்சர்ஷிப்பை மாற்றிக்கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவித்துள்ள நிலையில் தற்பொழுது அதனை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
இது குறித்து அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் Saad Al-Hammad அவர்கள், இது ஆட்சேர்ப்பின் நெகிழ்வுத்தன்மைக்கும் முதலாளி-தொழிலாளி ஆகிய இரு தரப்பினரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் பங்களிப்பதாக கூறியுள்ளார். மேலும், இது ஒப்பந்த உறவை மேம்படுத்துவதையும் அமைச்சகம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
அதேவளை, ஒரு வீட்டுத் தொழிலாளரின் சேவைகளை மாற்றுவது தொடர்பான அறிவுறுத்தல்களையும், ஆட்சேர்ப்பு நடவடிக்கை மற்றும் தொழிலாளர் சேவைகளை வழங்குவதற்கான விதிகளையும் அமைச்சகம் திருத்தம் செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இது சம்பந்தமாக தெரிவிக்கையில், தற்போதைய முதலாளியின் அனுமதியின்றி வீட்டுத் தொழிலாளர்களின் வேலையை மாற்றுவதற்கான அதன் முந்தைய முடிவை மாற்றியமைத்து சில சந்தர்ப்பங்களில் தொழிலாளியை வேறொரு முதலாளிக்கு மாற்றுவதற்கு புதிய பத்திகளை அமைச்சகம் சேர்த்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
புதிய திருத்தங்களின்படி, புதிய முதலாளி வேலையை மாற்றுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை செலுத்த வேண்டும் மற்றும் வீட்டுத் தொழிலாளர்கள் தங்குமிடங்களில், அவர்களது தங்குமிடத்திற்கு ஆக வேண்டிய கட்டணத்தை ஏற்க வேண்டும் என்பது தெரிய வந்துள்ளது.
புதிய முதலாளி, தொழிலாளியின் சேவையை மாற்றுவதற்கு முன், ஒப்புக்கொண்ட சம்பளத்துடன் வீட்டுத் தொழிலாளியை அதிகபட்சமாக 15-நாள் ப்ரொபேஷன் காலத்திற்கு (probation period) பணியமர்த்த முடியும்.
இதற்கு முந்தைய தொழிலாளர் சட்ட விதிமுறைகளின் படி, வீட்டுத் தொழிலாளர்கள் ஒப்பந்தத்தின் முடிவில் வெளியேறலாம் என்றிருந்த நிலையில், புதுப்பித்தலுக்குப் பின்னர், தற்போதைய முதலாளியின் அனுமதியின்றி பின்வரும் சூழ்நிலைகளில் புதிய முதலாளிகளுக்கு அவர்களின் ஸ்பான்சர்ஷிப்பை மாற்றலாம் என்று திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அவை:
>> முறையான காரணம் எதுவுமின்றி தொடர்ந்து மூன்று மாதங்களாக அல்லது இடையிடையே வீட்டுத் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டிருப்பது நிரூபிக்கப்பட்டிருந்தால்
>> சவூதி அரேபியாவிற்கு வந்த நாளிலிருந்து 15 நாட்களுக்குள் வீட்டுத் தொழிலாளர் வந்திறங்கிய விமான நிலையம் போன்ற இடங்களில் இருந்து அல்லது தங்குமிடங்களில் இருந்து வரவேற்க தவறுதல்.
>> வீட்டுத் தொழிலாளருக்கு குடியிருப்பு அனுமதி (Residency permit) (iqama) வழங்கவும் அல்லது அதன் காலாவதி தேதியிலிருந்து 30 நாட்கள் கழிந்த பின்னரும் முதலாளி அதை புதுப்பிக்கவும் தவறுதல்
>> வீட்டு வேலை செய்பவரின் வேலைகளை முதலாளி மற்றவர்களிடம் ஒப்படைத்தல்.
>> வீட்டு வேலை செய்பவர்களின் உடல்நலம் அல்லது பாதுகாப்பை அச்சுறுத்தும் அபாயகரமான வேலைக்கு நியமிக்கப்பட்டுள்ளார் என்பது நிரூபிக்கப்பட்டால்
>> முதலாளி அல்லது அவரது குடும்ப உறுப்பினரினால் வீட்டுத் தொழிலாளர் துஷ்பிரயோகம் (Abuse) செய்திருப்பது நிரூபிக்கப்பட்டால்
>> பணியமர்த்தும் முதலாளிக்கு எதிராக வீட்டுத் தொழிலாளர் புகார் செய்திருந்து அந்த புகாரை ஆய்வு செய்யும் செயல்முறையை முதலாளி நீட்டித்தால்.
>> வீட்டு வேலை செய்பவர் மீது தவறான ரன்அவே (ஹூரூப்) அறிக்கையை முதலாளி தாக்கல் செய்தல் மற்றும் வீட்டுத் தொழிலாளர்களின் தகராறு தீர்வுக் குழுக்களின் முன் முதலாளியோ அல்லது அவரது பிரதிநிதியோ இரண்டு அமர்வுகளுக்கு ஆஜராகாமல் இருத்தல்
>> முதலாளி மேற்கொண்ட பயணம், சிறைத்தண்டனை அல்லது வீட்டுத் தொழிலாளரின் ஊதியத்தை வழங்க இயலாமல் போனதற்கான காரணமாக வேறு ஏதேனும் இருத்தல்.
மேற்கண்ட சூழ்நிலைகளின் போது வீட்டுத் தொழிலாளர் ஒருவர் முதலாளியின் அனுமதியின்றி வேலையை மாற்றிக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.