ADVERTISEMENT

UAE: காவல்துறை விடுத்துள்ள எச்சரிக்கை..!! ஆன்லைன் மோசடிகளுக்கு எதிராக புதிய விழிப்புணர்வு பிரச்சாரம்…!!

Published: 22 Feb 2023, 9:43 PM |
Updated: 23 Feb 2023, 9:31 AM |
Posted By: Menaka

அமீரகம் முழுவதும் ஆங்காங்கே நிகழ்ந்து வரும் எலக்ட்ரானிக் மோசடி மற்றும் மிரட்டல் போன்றவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஷார்ஜா காவல்துறை புதிய நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. அதன்படி குடியிருப்பாளர்களிடம் எலெக்ட்ரானிக் மோசடி பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்த ‘Be Aware’ என்ற பிரச்சாரத்தை ஷார்ஜா காவல் துறையினர்  தொடங்கியுள்ளனர்.

ADVERTISEMENT

2023-2026 ஆம் ஆண்டிற்கான உள்துறை அமைச்சகத்தின் புதுமுயற்சிகளின் ஒரு பகுதியாக இருக்கும் இந்த பிரச்சாரம் அடுத்த மார்ச் வரை தொடரும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், நோட்டீஸ், ஆடியோ, வீடியோ, சமூக ஊடகம் மற்றும் ஷார்ஜா காவல்துறை இணையதளம் மூலம் விழிப்புணர்வு செய்திகளை அனுப்புவது இந்த பிரச்சாரத்தில் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த விழிப்புணர்வுச் செய்திகளில் தனிப்பட்ட அல்லது வங்கித் தகவல்களை யாருடனும் பகிர்ந்து கொள்ளாதது, OTP குறியீடு போன்ற சிறப்பு வங்கித் தகவலைக் கோரும் நம்பமுடியாத அழைப்புகளுக்குப் பதிலளிக்காதது, அறியப்படாத லிங்க்குகளை உள்ளடக்கிய மின்னஞ்சல்களைத் திறப்பதைத் தவிர்ப்பது உள்ளிட்ட வழிமுறைகள் இருக்கும் என்று ஷார்ஜா காவல்துறையின் ஊடகம் மற்றும் மக்கள் தொடர்புத் துறையின் துணை இயக்குநரான லெப்டினன்ட் கர்னல் முகமது புட்டி அல் ஹஜ்ரி அவர்கள் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

அதன்படி, குடியிருப்பாளர்களிடையே சைபர் கிரைம்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் பாதுகாப்புப் பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்த வலியுறுத்தியுள்ளார். அதேசமயம், தனிப்பட்ட அல்லது வங்கித் தகவல்களை அணுக முயற்சிக்கும் அழைப்புகள் மற்றும் செய்திகளுக்கு பதிலளிக்க வேண்டாம் என்றும், ஹேமாயா (Hemayah) மூலமாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொண்டு, பின்னர் மிரட்டி பணம் பறிப்பதை விரைவாகப் புகாரளிக்குமாறும் குடியிருப்பாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். எனவே, மக்கள் இது போன்ற புகார்களுக்கு “065943228” என்ற எண்ணையோ அல்லது 999 என்ற எண்ணையோ தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.