UAE: பிச்சை எடுத்தே 3 இலட்சம் திர்ஹம்ஸ் சம்பாதித்த நபர்.. அதிரடியாக கைது செய்த காவல்துறை..!!
போட்டிகள் நிறைந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்கள் தங்களுக்குத் தேவையான பணத்தை ஈட்ட பல்வேறு விதமாக சிந்தித்து செயல்பட்டு வருகின்றனர். அதிலும் ஒரு சராசரி மனிதனின் மூளை தந்திரமாக சிந்திக்க தொடங்கி விட்டால் பிச்சை எடுத்தே இலட்சக்கணக்கில் பணத்தை சம்பாதிக்க தயங்க மாட்டார்கள் என்பதற்குச் சான்றாக துபாயில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
சமீபத்தில் ஒரு பிச்சைக்காரர், பிச்சை எடுப்பதில் இருந்து திரட்டிய 300,000 திர்ஹம்களை அவரது செயற்கை மூட்டுக்குள் பொதித்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அவரை கைது செய்ததாக துபாய் காவல்துறை வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
இஸ்லாமியர்களின் ரமலான் மாதத்திற்கு முன்னதாகவோ அல்லது அதற்கு பின்னரோ அதிகரித்து வரும் இவ்வாறான குற்றங்களுக்கு எதிராக அண்மையில் தீவிரப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளின் போது குற்றவாளி காவல்துறையால் பிடிபட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
நுகர்வோரின் தேவைதான் வியாபாரியின் இலாபம் என்பது போல, ஒருவரின் அனுதாபமே பிச்சை எடுப்பவருக்கு சாதகம் என்பது மறுக்க முடியாத உண்மை. அதன்படி, ஊடுருவல் தடுப்பு பிரிவின் இயக்குனர் கர்னல் அலி அல் ஷம்சி அவர்கள் கூறுகையில், நாட்டில் பிச்சை எடுப்பவர்கள் மக்களின் அனுதாபத்தை பெற இதுபோன்ற ஏமாற்று முறைகளை பயன்படுத்துவதாக செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்துள்ளார். மேலும், சமீபத்தில் ஒரு பிச்சைக்காரரின் செயற்கை மூட்டுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 300,000 திர்ஹம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்தும் செய்தியாளர்களிடம் விளக்கியுள்ளார்.
எனவே, இதுபோன்ற ஏமாற்றுக்காரர்களிடம் இருந்து விலகியிருக்குமாரும், ரமலான் மாதத்தில் உணர்வுகளைப் பயன்படுத்தி எளிதில் பணம் சம்பாதிக்க முயலும் பிச்சைக்காரர்களிடம் அனுதாபம் காட்டுவதைத் தவிர்க்குமாறும் ஆணையம் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.
அதேசமயம், பொது மக்களின் பாதுகாப்பை பாதிக்கும் இத்தகைய சட்டவிரோத நடைமுறைகளை எதிர்த்துப் போராட காவல்துறைக்கு உதவ பிச்சை எடுக்கும் நடவடிக்கைகளைப் புகாரளிக்குமாறும் அவர் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.