சுத்தமான காற்றை சுவாசிக்க கார் இல்லாத நகரத்திற்கான திட்டம்!! எதிர்காலத்தில் எக்ஸ்போ சிட்டி துபாய் இப்படிதான் இருக்கும்..
எதிர்காலத்தில் எக்ஸ்போ சிட்டி துபாய், மக்களை மையமாகக் கொண்ட நிலையான நகரமாக இருக்கும் என தற்பொழுது அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் இது சம்பந்தமான குடியிருப்பு மேம்பாடுகளுக்கான திட்டங்கள் விரைவில் வெளிப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மேம்பாடுகளில் அடுக்குமாடி குடியிருப்புகள், டவுன்ஹவுஸ்கள் மற்றும் வில்லாக்கள் ஆகியவை அடங்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனையொட்டி அமீரகத்தின் பெருமை மிக்க மரபு நகரமான எக்ஸ்போ 2020 துபாயின் மையத்தில் வசிக்க குடியிருப்பாளர்களுக்கு தனித்துவமான வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நகரத்தில் காற்றின் தரம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்த கார் இல்லாத மாவட்டங்களாக செயல்பட நடவடிக்கைகள் எடுப்பதற்கான திட்டம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கூறியவாறு செயல்படுத்தப்பட்ட பின்னர் இந்த புதிய, சுத்தமான மற்றும் பசுமையான சூழ்நிலையில் வசிக்கும் மக்கள், எக்ஸ்போ சிட்டி துபாயின் அருகிலேயே அனைத்து அனுபவங்களையும் பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது, எக்ஸ்போ சிட்டி துபாய் வழங்கும் அனுபவங்களில் அதன் கல்வி, கலாச்சார மற்றும் பொழுதுபோக்கு சலுகைகள், அலுவலகங்கள், பொழுது போக்கு இடங்கே், உணவகங்கள், 10 கிமீ சைக்கிள் ஓட்டும் பாதைகள், 5 கிமீ ஓட்டப் பாதை, சிறுவர் விளையாட்டு மைதானங்கள் மற்றும் 45,000 சதுர மீட்டர் பூங்காக்கள் மற்றும் தோட்டங்கள் போன்றவை அடங்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேசமயம், இந்த குடியிருப்புகளானது பசுமையான மற்றும் நிலையான வாழ்வியல் முறையில் கவனம் செலுத்தி, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வடிவமைப்பில் சிறந்த நடைமுறைகளை எடுத்துக்காட்டும் என்று எக்ஸ்போ சிட்டி துபாய் தெரிவித்துள்ளது. மேலும், மார்ச் 15-ம் தேதி Sustainability District-இல் அமைந்துள்ள விற்பனை மையம் திறப்பு விழாவுடன், குடியிருப்பு மேம்பாடுகள் பற்றிய முழு விவரங்கள் தெரிய வரும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.