குவைத் அரசாங்கம் வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் டிரைவிங் லைசென்ஸில் புதிய நிபத்தனைகளை மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வெளிநாட்டவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்கான புதிய விதிமுறைகளை உள்துறை அமைச்சகத்தின் போக்குவரத்துத் துறை தயாரித்து வருகின்ற நிலையில், குவைத்தில் புதிய அரசு அமைந்த பிறகு உள்துறை அமைச்சரின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கிடைத்துள்ள தகவல்களின்படி, புதிய விதிமுறைகளில் ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்கும் வெளிநாட்டவர்களுக்கான குறைந்தபட்ச சம்பளத் தேவையை அதிகரிப்பது மற்றும் குறிப்பிட்ட தொழில்களில் பணிபுரியும் வெளிநாட்டவர்களுக்கு மட்டுமே ஓட்டுநர் உரிமம் பெற அனுமதிக்கப்படுவது போன்றவை அடங்கும் என கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த நிபந்தனைகள் சாலைகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்டை நாடுகளில் பயன்படுத்தப்படும் நிபந்தனைகளுடன் ஒப்பிடும்போது, அடிப்படைத் தொழில்களில் பணிபுரியும் வெளிநாட்டவர்கள் மற்றும் வாகனங்களைப் பயன்படுத்தும் அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டவர்கள் ஆகியோர் ஓட்டுநர் உரிமத்தைப் பெறுவதற்கான குவைத்தின் மென்மையான நிபந்தனைகளால் பயனடைவதாக ஆதாரங்கள் தெரிவித்துள்ளன. இதனால் தற்பொழுது நிபந்தனைகள் சற்று கடுமையாக்கப்படுவதாக கூறப்படுகின்றது.
குவைத்தில் உள்ள வெளிநாட்டவர்கள் சுமார் 800,000 ஓட்டுநர் உரிமங்களை வைத்துள்ளனர். அதில் கடந்த அக்டோபர் 2022 இல், குவைத் செய்தித்தாள் அல்-ராய் நிறுவனம், ஓட்டுநர் உரிமத்தைப் பெறுவதற்கான தேவைகளைப் பூர்த்தி செய்யாத வெளிநாட்டினருக்கான மதிப்பாய்வின் விளைவாக கிட்டத்தட்ட 200,000 ஓட்டுநர் உரிமங்கள் திரும்பப் பெறும் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனால் குவைத்தில் வசிக்கும் வெளிநாட்டவர்களில் பலர் தங்களது டிரைவிங் லைசென்ஸை இழக்கக்கூடிய வாய்ப்பும் இருப்பதாக கூறப்படுகின்றது.
இதனுடன் சேர்த்து வாகனங்களின் தொழில்நுட்ப ஆய்வு தொடர்பான பிற முடிவுகளும் போக்குவரத்துத் துறையால் வெளியிடப்படும் என்றும், இது 15 ஆண்டுகளுக்கு மேலான 20,000 க்கும் மேற்பட்ட வாகனங்களின் பதிவுகளைத் தடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.