UAE: நடைபாதைகளில் வாகனங்களை பார்க்கிங் செய்பவர்கள் கவனம்…!! 1,000 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் என்று முனிசிபாலிட்டி எச்சரிக்கை…!!
அபுதாபியில் நடைபாதைகள், சாலையோரங்கள், ஸ்போர்ட்ஸ் பாதைகள் மற்றும் பார்க்கிங்கிற்கு ஒதுக்கப்படாத இடங்களில் வாகனங்களை நிறுத்தும் வாகன ஓட்டிகள் மற்றும் உரிமையாளர்களுக்கு சுமார் 1,000 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் என்று அபுதாபி முனிசிபாலிட்டி எச்சரித்துள்ளது.
சமீபத்தில் ரப்தான் மற்றும் ஷக்பூத் பகுதிகளில் பொதுச் சொத்துக்கள் மற்றும் உள்கட்டமைப்பைப் பாதுகாக்க குடியிருப்பாளர்களை வலியுறுத்தி அபுதாபி முனிசிபாலிட்டி அதிகாரிகள் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளனர்.
இந்த பிரச்சாரத்தில், போக்குவரத்து நெரிசலை உண்டாக்கும் வகையில் பார்க்கிங் செய்வது, மற்ற பாதசாரிகள் மற்றும் சாலைப் பயனாளர்களுக்கு இடையூறு விளைவிக்கும் விதம் உட்பட, நியமிக்கப்படாத இடங்களில் வாகனங்கள் பார்க்கிங் செய்யப்பட்டிருந்தது போன்ற பல நிகழ்வுகளை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குறிப்பாக, அபராதம் விதிக்கப்பட்ட குற்றவாளிகள் குற்றம் நடந்த 30 நாட்களுக்குள் அபராதத்தை செலுத்தினால், அவர்களுக்கு 500 திர்ஹம் தள்ளுபடி கிடைக்கும் என்பதை அவர்கள் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.