UAE: விசிட் விசாவில் வந்து பிச்சை எடுத்த குடும்பம்!! கைது செய்த காவல்துறை…!!
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு விசிட் விசாவில் வந்த ஒரு குடும்பம், துபாயில் பிச்சை எடுப்பது துபாய் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புனித ரமலான் மாதத்தில் துபாய் காவல்துறை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது நூற்றுக்கும் மேற்பட்ட பிச்சைக்காரர்கள் பிடிபட்டனர். அவர்களில் ஒரு குடும்பம் விசிட் விசாவில் நாட்டுக்குள் நுழைந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
துபாய் காவல்துறையின் கூற்றுப்படி, இரண்டு சகோதரர்கள், தங்கள் மனைவிகள் மற்றும் ஒரு குழந்தையுடன், ஒரு மசூதிக்கு அருகில் பிச்சை எடுப்பதைப் பார்த்துள்ளனர். உடனடியாக காவல்துறை அதிகாரிகள் அவர்களை கைது செய்துள்ளனர்.
இது குறித்து பொது குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் மேஜர் ஜெனரல் ஜமால் சலேம் அல் ஜல்லாஃப் அவர்கள் கூறுகையில், பிச்சைக்காரர்கள் ரமலான் மாதத்தில் மக்களின் தாராள மனப்பான்மையைப் பயன்படுத்தி அவர்களிடமிருந்து பணத்தைப் பெறுவதற்கு ஏமாற்றும் செயல்களை மேற்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ரமலான் மாதத்தின் முதல் பாதியில் 116 பிச்சைக்காரர்கள் கைது செய்யப்பட்டதாக அவர் கூறியுள்ளார். அவர்களில் 59 ஆண்களும், 57 பெண்களும் அடங்குவர். அவர்கள் மிகப்பெரிய தொகையுடன் பிடிபட்டது குறிப்பிடத்தக்கது.
நாட்டில் பெரும்பாலான பிச்சைக்காரர்கள் வெளியில் இருந்து இயக்கப்படும் சிண்டிகேட்டின் ஒரு அமைப்பு என்பது விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. குறிப்பாக, அவர்கள் அனைவரும் அமீரகம் முழுவதும் தெருக்களில் பிச்சை எடுப்பதற்காக விசிட் விசாவில் அனுப்பி வைக்கப்படுகிறார்கள். எனவே, பிச்சைக்காரர்களுக்கு ஒரு போதும் பதிலளிக்க வேண்டாம் என்றும் பொதுமக்களை அவர் அறிவுறுத்தியுள்ளார்.
அதுமட்டுமில்லாமல், ஆதரவற்றவர்களுக்கு உதவ விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட சேனல்களுக்கு மட்டுமே நன்கொடை அளிக்குமாறும் உதவி தேவைப்படும் எவரும் உத்தியோகபூர்வ நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் சங்கங்கள் மூலம் நிதி உதவி பெறலாம் என்றும் அதிகாரி தெளிவுபடுத்தியுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் பிச்சை எடுப்பது சட்டவிரோதமாகும். எனவே, பொதுமக்கள் துபாய் காவல்துறையின் ‘Eye’ ஸ்மார்ட் ஆப் மூலமாகவோ, கால் சென்டர் 901 மூலமாகவோ அல்லது இ-கிரைம் சேவை மூலமாகவோ பிச்சைக்காரர்களைப் பற்றி புகார் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.