UAE: சர்வதேச தொழிலாளர் தினத்தில் 7,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு விருந்தளித்த நிறுவன தலைவர்கள்..!! இந்தியத் தூதர் பங்கேற்பு..!!
துபாயில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தை சேர்ந்த சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மூத்த ஊழியர்கள் மற்றும் துறைத் தலைவர்கள், சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் 7,000-க்கும் மேற்பட்ட சக தொழிலாளர்களுக்கு பல்வேறு ஆசிய மற்றும் அரபு உணவுகளை தயார் செய்து அவர்களுக்கு வழங்கியுள்ளனர்.
துபாயை தலைமையிடமாகக் கொண்ட EFS குழுமம் எனும் மேலாண்மை நிறுவனமானது, சர்வதேச தொழிலாளர் தினத்தை சிறப்பான முறையில் கொண்டாடியுள்ளது. இந்த நிறுவனம் ஜெபல் அலியில் நடத்திய விழாவில் ஊழியர்களுக்கு சுவையான உணவுகளை விருந்தளித்ததுடன், சிறப்பு நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்திருந்தது.
இந்த விருந்து நிகழ்ச்சியில் துபாய் மற்றும் வடக்கு எமிரேட்ஸின் இந்தியத் தூதரான டாக்டர் அமன் பூரியும் கலந்துகொண்டுள்ளார். அத்துடன் உழைப்பாளர் தினம் குறித்து அவர் உரையாற்றுகையில், தங்கள் குடும்பங்களை விட்டு விலகி அமீரகத்தில் வசிக்கும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அனைத்து தொழிலாளர்களுக்கும் இடையிலான கடின உழைப்பு, செழிப்பு மற்றும் நட்புறவைக் கொண்டாடுவதற்கான நேரம் சர்வதேச தொழிலாளர் தினம் என்று கூறியுள்ளார். அதுமட்டுமின்றி, அவர்களின் கடின உழைப்பு மற்றும் பொருளாதாரத்திற்கான பங்களிப்பை நாங்கள் ஆழமாக மதிக்கிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விருந்து குறித்து EFS குழுமத்தின் தலைமை நிர்வாகி தாரிக் சௌஹான் கூறுகையில், இதன் நோக்கம் என்னவெனில், எங்களின் சக ஊழியர்களான தொழிலாளர்களுக்கு உணவு சமைத்து வழங்க நாங்கள் விரும்பியதாகவும், அவரைப்போலவே, தான் உட்பட சுமார் 1,200 ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உணவை தயார் செய்து வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.