குப்பைகளை சேகரிக்க மின்சார லாரிகளை அறிமுகம் செய்த அபுதாபி!! கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்த புதிய முயற்சி…!!
அபுதாபியின் கழிவு மேலாண்மை நிறுவனமான தத்வீர் (Tadweer), குப்பைகளை சேகரிக்கும் மின்சார லாரிகளை சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை கார்பன் உமிழ்வைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டது மட்டுமல்லாமல், மத்திய கிழக்கில் நிலவும் கடும் கோடை வெப்பத்தில் மின்சார வாகனங்களின் செயல்திறனை மதிப்பிடுவதற்கான ஒரு சோதனையாகவும் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இத்தகைய சோதனைக்காக ரெனால்ட் லாரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அத்துடன் வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்களைக் கண்டறிதல் போன்ற மின்சார வாகனங்கள் எதிர்கொள்ளும் நீண்டகால சவால்களுக்கான சாத்தியமான தீர்வுகளை அடையாளம் காண கண்காணிப்புக்கு உட்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, இந்த முன்முயற்சியானது எமிரேட்டில் நிலையான எதிர்காலத்தை உருவாக்குதல் என்ற தத்வீர் நிறுவனத்தின் இலக்குகளுடனும், அபுதாபியின் சுற்றுச்சூழல் விஷன் 2030 மற்றும் 2050 ம் ஆண்டிற்குள் பூஜ்ய உமிழ்வு ஆகிய திட்டத்தை ஆதரிப்பதற்கான அர்ப்பணிப்புடனும் ஒத்துப்போவதாகக் கூறப்படுகிறது.
இந்த மின்சார லாரிகள் அமீரகத்தில் புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும், ஏற்கனவே, பாரிஸ் மற்றும் பார்சிலோனா போன்ற நகரங்களில் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டு, வருவது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து தத்வீரின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாகியுமான அலி அல் தாஹேரி என்பவர் கூறுகையில், கழிவு மேலாண்மை மற்றும் நிலையான எதிர்காலத்தை இயக்குவதில் முன்னோடியாகதத்வீர், தனது நிலையை நிலைநிறுத்தியுள்ளது என்று கூறியுள்ளார்.
அவரைத் தொடர்ந்து, Renault Trucks International இன் தலைவரான ஒலிவியர் டி செயின்ட் மெலேயுக் அவர் விவரிக்கையில் “இன்றைய காலத்தில் புவி வெப்பமயமாதலைச் சமாளிப்பது கட்டாயமாகும், இந்த அதிநவீன லாரிகள் கார்பன் உமிழ்வைக் குறைப்பதன் மூலம் உலகத் தேவையை நிவர்த்தி செய்வதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.