துபாய் குடியிருப்பாளர்கள் 6 மாதத்திற்கு மேல் வெளிநாட்டில் தங்கினால் மறுநுழைவுக்கு விண்ணப்பிக்கலாமா? – நடைமுறைகள் என்ன?
ஆறு மாதங்களுக்கும் மேலாக நாட்டிற்கு வெளியே தங்கியிருந்து விசா ரத்து செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான ஐக்கிய அரபு அமீரகக் குடியிருப்பாளர்கள் மீண்டும் அமீரகத்திற்குள் நுழைய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜனவரியில், அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுகப் பாதுகாப்புக்கான பெடரல் அத்தாரிட்டி (ICP) அத்தகைய குடியிருப்பாளர்களுக்கு மறு நுழைவு அனுமதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
முன்னதாக, அமீரகத்திற்கு வெளியே ஆறு மாதங்களுக்கும் மேலாக தங்கியிருந்தால், மீண்டும் நாட்டிற்கு திரும்புவதற்கு விசிட் விசாவிற்கு விண்ணப்பிக்க வேண்டியிருந்தது. துபாயைத் தவிர மற்ற அனைத்து எமிரேட்களிலும் வசிப்பவர்கள் ICP இணையதளத்தில் இந்த சேவைக்கு விண்ணப்பிக்கலாம். இருப்பினும், துபாயில் வழங்கப்பட்ட விசாவை வைத்திருப்பவர்களுக்கு இந்த செயல்முறை சற்று வித்தியாசமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இது குறித்து விசா சேவைகள் வழங்கும் நிறுவனத்தை சார்ந்த ஒருவர் கூறுகையில், இது மிகவும் நேரடியான செயல்முறை என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், துபாயின் GDRFA இணையதளத்தில் நாம் செயல்முறையைச் செய்து தேவையான விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கலாம் என்று கூறிய அவர், அவர்கள் ஏன் நாட்டிற்கு வெளியில் 6 மாதத்திற்கு மேல் தங்கியிருந்தனர் என்பது குறித்த கடிதத்தை வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
குறிப்பாக, துபாய் குடியிருப்பாளர்கள் அவர்களது அப்ளிகேஷனை தாங்களாகவே இணையதளத்தில் விண்ணப்பிக்க முடியாது, ஒரு ஏஜென்டு மூலமாக விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அதுபோல, ஸ்பான்சரும் எந்த ஒரு அமர் மையத்திலும் (Amer Centre) மறுநுழைவு அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம் என்று GDRFA கால் சென்டரில் உள்ள ஒரு ஏஜென்ட் கூறியுள்ளார்.
அதுவே மற்ற எமிரேட்களின் குடியிருப்பாளர்கள் ICP இணையதளத்தில் சேவையை அணுகலாம். அவர்கள் ‘ஸ்மார்ட் சர்வீசஸ்’ என்பதன் கீழ், ‘6 மாதங்களுக்கு மேல் UAEக்கு வெளியே தங்குவதற்கான அனுமதியை வழங்கு’ என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அவர்கள் நீண்ட காலம் நாட்டிற்கு வெளியே தங்கியிருப்பதற்கான காரணத்தைக் குறிப்பிதுவதுடன் அதற்கான ஆதாரத்தையும் அளிக்க வேண்டியிருக்கும்.
விண்ணப்பத்திற்தற்கான நிபந்தனைகள்:
- விண்ணப்பம் வெளிநாட்டிலிருந்து சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
- குடியிருப்பாளர் நாட்டிற்கு வெளியே தங்கிய 180 நாட்களுக்குப் பிறகு மறுநுழைவு அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம்.
- விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டதும், விண்ணப்பதாரர் 30 நாட்களுக்குள் நாட்டிற்குள் நுழைய வேண்டும்.
- 180 நாட்களுக்கு மேல் நாட்டிற்கு வெளியே இருப்பதை நியாயப்படுத்த சரியான காரணத்தை ஆதாரத்துடன் வழங்க வேண்டும்.
- நாட்டிற்கு வெளியே செலவழிக்கும் ஒவ்வொரு 30 நாட்களுக்கும் அல்லது அதற்கும் குறைவான நாட்களுக்கு 100 திர்ஹம்கள் அபராதமாக செலுத்த வேண்டும்.