துபாய்: புதுப்பொலிவுடன் மிளிரவுள்ள தேரா க்ளாக்டவர் ரவுண்டானா..!! சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளும் முனிசிபாலிட்டி…!!
துபாயின் அழகை மெருகேற்றும் பிரபலமான அடையாளங்களில் ஒன்றான வரலாற்று சிறப்புமிக்க தேரா க்ளாக்டவர் ரவுண்டானாவை சீரமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பழைய காலத்து அமீரகத்தையும் தற்போதைய அமீரகத்தையும் இணைக்கும் பாலமாகவும் பல தசாப்தங்களாக அமீரகம் வந்தோருக்கும் வந்து கொண்டிருப்பவர்களுக்கும் மனதில் நிலைத்து நிற்கக்கூடிய இந்த பழம்பெரும் கிளாக் டவரானது உம் ஹுரைர் ஸ்ட்ரீட் மற்றும் அல் மக்தூம் ஸ்ட்ரீட் இன்டர்செக்சனில் அமைந்துள்ளது. அத்துடன் இந்த கிளாக்டவர் 1963 ஆம் ஆண்டு கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
காலம்கடந்தும் தனித்து நிற்கும் இந்த ஐகானிக் கட்டமைப்பின் மறுசீரமைப்பு பணிகள் முழுவீச்சில் தற்போது நடந்து கொண்டிருக்கும் நிலையில் அதன் வீடியோவை அதிகாரிகள் ட்விட்டரில் பகிர்ந்துள்ளனர். அதிகாரிகள் பகிர்ந்த வீடியோவில், வேலையாட்கள் தரையை சமன் செய்வதையும், நீரூற்று பகுதியில் நீரை நிரப்புவதையும் காணலாம்.
மேலும், இந்தச் சீரமைப்புப் பணிகளில் ரவுண்டானாவின் பழைய தளங்களை புதிய தளங்களாக மாற்றுதல், இரவில் ஜொலிக்கும் வண்ண விளக்குகளை நிறுவுதல், க்ளாக்டவரைச் சுற்றி அலங்காரமான தோட்டத்தை அமைத்தல், நீரூற்றை புதுப்பித்தல் போன்றவை இடம்பெறும் என கூறப்பட்டுள்ளது. அத்துடன் க்ளாக்டவரில் உள்ள கடிகாரத்திற்கான புதுப்பித்தல் பணிகளும் அதிவிரைவாக நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.
.@DMunicipality embarks on a significant renovation project to revitalize the Iconic Deira Clocktower roundabout. pic.twitter.com/Ofu25Dm7uT
— Dubai Media Office (@DXBMediaOffice) July 17, 2023
துபாய் முனிசிபாலிட்டியின் டைரக்டர் ஜெனரல் தாவூத் அல் ஹஜ்ரி அவர்களால் அறிவிக்கப்பட்ட இந்த திட்டத்தின் மறுசீரமைப்புப் பணிகள் அடுத்த மூன்று மாதங்களுக்கு நீடிக்கும் என்று முனிசிபாலிட்டி தெரிவித்துள்ளது.
க்ளாக்டவர் மட்டுமின்றி, எமிரேட் முழுவதும் உள்ள அனைத்து முக்கிய அடையாளங்களுக்கும் துபாய் முனிசிபாலிட்டி மேம்பாட்டுத் திட்டங்களை அறிவித்துள்ளது. இது துபாயின் வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டடக்கலை அடையாளங்களை பராமரித்து, எதிர்கால சந்ததியினருக்காக அவற்றைப் பாதுகாப்பதன் மூலம், நகரத்தின் அழகியல் தோற்றத்தை மேம்படுத்த உதவுகிறது.
இத்திட்டம் குறித்து தாவூத் அல் ஹஜ்ரி பேசுகையில், அமீரக துணைத் தலைவரும் பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்களால் தொடங்கப்பட்ட துபாய் 2040 அர்பன் மாஸ்டர் பிளான் (Dubai 2040 Urban Master Plan) திட்டத்துடன் இத்திட்டமும் வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.