குடியிருப்பாளர்களின் புகார்களுக்கு புல்லட் வேகத்தில் பதிலளிக்கும் துபாய் காவல்துறை..!! 2.1 மில்லியன் அழைப்புகளுக்கு 10 வினாடிக்குள் பதில் அளித்ததாக தகவல்.!!
துபாய் காவல்துறையின் கமாண்ட் மற்றும் கன்ட்ரோல் சென்டர் (Command and Control Centre) இந்தாண்டின் இரண்டாம் காலாண்டில் மட்டும் சுமார் 2,189,646 அழைப்புகளை குடியிருப்பாளர்களிடம் இருந்து பெற்றதாக தகவல் வெளியிட்டுள்ளது.
அவற்றில் 2,143,796 அழைப்புகளுக்கு வெறும் 10 வினாடிகளுக்குள்ளேயே பதிலளித்துள்ளதன் காரணமாக பதிலளிக்கக்கூடிய விகிதத்தில் 97.91 சதவிகிதம் என்ற உயர்ந்த மதிப்பைப் பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த புள்ளிவிவரத் தகவலானது, லெப்டினன்ட் ஜெனரல் அப்துல்லா கலீஃபா அல் மர்ரி அவர்களின் தலைமையில் நடத்தப்பட்ட துபாய் காவல்துறையின் பொது செயல்பாட்டுத் துறையின் மதிப்பாய்வுக் கூட்டத்தில் தெரிய வந்துள்ளது.
ஏற்கனவே, கடந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் பதிவான 1,780,562 அழைப்புகளுக்கு 99.8 என்ற சதவீத பதிலளிப்பு விகிதத்துடன் ஒப்பிடும்போது, இது குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் குறிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக, லெப்டினன்ட்-ஜெனரல் அல் மரி இந்தாண்டு இரண்டாம் காலாண்டிற்கான அவசரகால ஹாட்லைனின் (999) மூலம் பெறப்பட்ட புகார்களின் புள்ளிவிவரங்கள் குறித்து முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிட்டுப் பார்த்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும், தீவிர அவசரநிலைகளுக்கு பாதுகாப்பு ரோந்துகளின் சராசரி வருகை நேரம் குறித்த புள்ளிவிவரங்களையும் அவர் மதிப்பாய்வு செய்ததாகவும், அது 2 நிமிடம் மற்றும் 53 வினாடிகளாக இருந்தத்தாகவும் துபாய் காவல்துறையினரால் மதிப்பிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், இந்த மதிப்பாய்வு கூட்டத்தில், முந்தைய மதிப்பீட்டு கூட்டத்தின் முடிவுகள் மற்றும் சமீபத்திய முன்னேற்றங்கள் பற்றிய ஆய்வு உட்பட நிகழ்ச்சி நிரலில் பல்வேறு தலைப்புகளில் விவாதிக்கப்பட்டதாகவும் காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.