துபாயில் போலியான கிரெடிட்/டெபிட் கார்டுகளை குறி வைக்கும் கும்பல்.. 2 மில்லியன் திர்ஹம்ஸ் அபராதம்.. எச்சரிக்கும் காவல்துறை..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டை போலியாக தயாரித்தல் அல்லது மறு உருவாக்கம் செய்தல் போன்ற நடவடிக்கைகளில் எவரேனும் ஈடுபட்டால், 2 மில்லியன் திர்ஹம் வரை அபராதம் விதிக்கப்படலாம் என்று துபாய் பப்ளிக் பிராசிகியூஷன் அதன் சமூக ஊடகக் கணக்கில் குடியிருப்பாளர்களை எச்சரித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் ஃபெடரல் அரசாணையின் படி, கிரெடிட் அல்லது டெபிட் கார்டு போன்ற மின்னணு கட்டண முறையை கம்ப்யூட்டர் புரோக்ராம் அல்லது டெக்னாலஜியைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக போலியான கார்டுகளை தயாரிப்பவர்கள் மற்றும் மோசடி செய்பவர்களுக்கு சிறைத்தண்டனை மற்றும் 500,000 திர்ஹம் முதல் 2 மில்லியன் திர்ஹம்களுக்கும் குறையாத அபராதம் விதிக்கப்படும் என பப்ளிக் பிராசிகியூஷன் தெரிவித்துள்ளது.
அதுபோல, மத்திய அல்லது உள்ளூர் அரசாங்கத்தின் மின்னணு ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை போலியாக உருவாக்குபவர்களுக்கு ஃபெடரல் ஆணை-சட்ட எண். 34 இன் பிரிவு 14 இன் படி, மத்திய அல்லது உள்ளூர் பொது அதிகாரிகள் அல்லது அமைப்புகளுக்கு 750,000 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
அதேவேளை, மேலே குறிப்பிடப்படாத எந்தவொரு நிறுவனத்தின் ஆவணங்களையும் சட்டவிரோதமாக போலி நகலெடுக்கும் குற்றத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்கள் 100,000 திர்ஹம் முதல் 300,000 திர்ஹம் வரை அபராதம் விதிக்கப்படலாம் எனவும் அமீரக சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
மேலும், துபாய் அரசு நிறுவனங்களின் வெப்சைட், டிஜிட்டல் அமைப்பு, இன்பர்மேஷன் நெட்வொர்க் அல்லது எந்தவொரு தகவல் தொழில்நுட்பத்தையும் சட்ட விரோதமாக அணுகினால் தற்காலிக சிறைத்தண்டனை மற்றும் குறைந்தபட்சம் 200,000 திர்ஹம் முதல் 500,000 திர்ஹம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று துபாய் காவல்துறையும் தெரிவித்துள்ளது.