ADVERTISEMENT

சூனியக்காரியின் மோசடி வலையில் சிக்கிய எமிராட்டி பெண்!! வெளிச்சத்திற்கு வந்த உண்மையால் பெண்ணுக்கு ஆதரவாக தீர்ப்பளித்த நீதிமன்றம்..!!

Published: 31 Jul 2023, 7:31 PM |
Updated: 31 Jul 2023, 8:00 PM |
Posted By: Menaka

அமீரகத்தில் சூனியம் செய்யும் ஒரு அரபு நாட்டைச் சேரந்த சூனியக்காரியின் பிடியில் சிக்கிய துபாயைச் சேர்ந்த எமிராட்டி பெண் ஒருவர், சிறைவாசம், கடன், மன உளைச்சல் போன்ற ஏராளமான துன்பங்களை கடந்த 10 வருடங்களாக அனுபவித்துள்ளார். சூனிய வலையில் சிக்கி எக்கச்சக்கமான பணத்தை பறி கொடுத்தது மட்டுமில்லாமல் இந்த சதியிலிருந்து விடுபட இரண்டு தசாப்தங்கள் எடுத்ததாகவும் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

பெண் ஒருவரை நம்பி இத்தனை கஷ்டங்களை அனுபவித்த போதிலும், அவரது வேதனையான கதையைப் பற்றி தைரியமாக ஊடகங்களிடம் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார். அதற்கு காரணம் இது போன்று மற்ற எவரும் ஏமாற்றுபவர்களின் வலையில் சிக்காமல் இருப்பதற்கு இது ஒரு எச்சரிக்கை செய்யும் கதையாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சூனியக்காரியின் தந்திரங்கள் குறித்து பாதிக்கப்பட்ட பெண் விவரிக்கையில், முதன்முதலில் அஜ்மானில் அந்த அரபு பெண்ணை தனது டீன் ஏஜில் சந்தித்ததாகவும், மேலும் தனக்கு அமானுஷ்ய சக்திகள் இருப்பதாகக் கூறிய அந்தப் பெண்ணின் பனை ஓதுதல், மாந்திரீகம், காபி வாசிப்பு போன்ற பல்வேறு சேவைகளை நாடி வரும் தினசரி வாடிக்கையாளராக தான் மாறியதாகவும் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

இதனை தனக்கு சாதகமாக்கிக்கொண்ட சூனியக்காரியின் தந்திரத்தில் சிக்கிய அவர், முதலில் பணம் கொடுத்து சேவைகளைப் பெற்றிருக்கிறார். சில நேரங்களில் பணமாகவும், மற்ற நேரங்களில் அவரின் கணவர் கணக்கில் பணத்தை செலுத்துவது போன்று பல முறையும் பணத்தை இழந்திருக்கிறார். அன்றைய மதிப்பீட்டின்படி, சுமார் 4 மில்லியன் திர்ஹம்ஸ் வரையிலும் சூனியக்காரியிடம் பணத்தை இழந்ததாகவும் பாதிக்கப்பட்ட அந்த பெண் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது; கடந்த 2013 ஆம் ஆண்டு டேஷ் மோதல் (Daesh conflict) உச்சக்கட்டத்தை எட்டியபோது, ​​சூனியக்காரி தனது கணவரை பயங்கரவாதக் குழு கடத்திச் சென்றதாகவும், அவரை விடுவிக்க பணம் கேட்பதாகவும் இவரிடம் கூறி நம்ப வைத்துள்ளார். பின்னர் தனது கணவரை மீட்க பணம் ஏற்பாடு செய்யப்படுவதாக கடத்தல்காரர்களுக்குக் காட்ட மொத்தம் 27 மில்லியன் திர்ஹம்களுக்கு காசோலை மற்றும் 80 மில்லியன் திர்ஹம் மதிப்புள்ள கடன் ஒப்புகையில் (debt acknowledgement) கையெழுத்திடும்படியும் அந்த சூனியக்காரி கேட்டுள்ளார்.

ADVERTISEMENT

அப்போது, சூனியக்காரியின் சதியை அறிந்திராத அவர், ஒரு உயிரைக் காப்பாற்ற சில பேப்பர்களில் கையெழுத்திடுவது உதவுமானால், அப்படியே ஆகட்டும் என்று காசோலைகள் மற்றும் கடன் ஒப்புதலில் கையெழுத்திட்டுள்ளார். ஆனால், சூனியக்காரியோ பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எதிராகவே வழக்குப் பதிவு செய்து, 80 மில்லியன் திர்ஹம்ஸ் பணமோசடி செய்ததாக கூறி அவரையே சிறையில் தள்ளியுள்ளார். இதில் பாதிக்கப்பட்ட அந்த எமிராட்டி பெண் ஷார்ஜா சிறையில் 18 நாட்கள் அவதிப்பட்டுள்ளார்.

இவ்வாறு சூனியக்காரியின் மோசடிக்கு ஆளாகி, வங்கிக் கடன்களால் மனச்சோர்வில் விரக்தியடைந்த பாதிக்கப்பட்ட எமிராட்டி பெண்ணின் வழக்கை கையாண்ட வழக்கறிஞர் ஹசன் அலி என்பவரின் முயற்சியின் விளைவாக இந்த வழக்கு மறுவிசாரணைக்கு வந்துள்ளது. பல வருட நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகே பாதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு எதிரான 80 மில்லியன் திர்ஹம்ஸ் வழக்கானது கைவிடப்பட்டுள்ளது.

இருப்பினும், மேல்முறையீடு செய்ய முயன்ற சூனியக்காரி இறுதியாக தோல்வியை தழுவியுள்ளார். மேலும் இந்த விவகாரம் அபுதாபியில் உள்ள ஃபெடரல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தற்போது UAE சுப்ரீம் கோர்ட் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ஆதரவாக தீர்ப்பளித்ததுடன், அவர் பணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை என்றும் தீர்ப்பு வழங்கியுள்ளது.

எனினும் இந்த வழக்கில் சூனியக்காரிக்கு விதிக்கப்பட்ட தண்டனை குறித்த விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. எவ்வாறாயினும், இதுபோன்ற வழிகளில் மக்களை ஏமாற்றி அவர்களை பிரச்சனைகளில் சிக்கவைத்து பணம் பறிக்க முயல்பவர்களிடம் எச்சரிக்கையாகவும், விழிப்புணர்வுடனும் இருப்பது மிகவும் அவசியமாகும்.