ADVERTISEMENT

ஓமானின் புதிய ஹைத்தம் சிட்டி.. வெளிநாட்டவர்களுக்கு சொத்துரிமை.. 50,000 வேலைவாய்ப்பு.. மாஸ்டர் பிளானை வெளியிட்ட அரசு..!!

Published: 19 Jul 2023, 4:07 PM |
Updated: 19 Jul 2023, 5:17 PM |
Posted By: Menaka

ஓமானில் உள்ள சீப் விலாயத்தில் எதிர்காலத்திற்கான நகர்ப்புற சின்னமாகவும், எதிர்காலத்திற்கான பொக்கிஷமாகவும், எதிர்கால சந்ததியினர் மற்றும் சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்குமான ஸ்மார்ட் நகரமாக சுல்தான் ஹைதம் சிட்டி திட்டமானது சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஓமானின் ஸ்மார்ட் மற்றும் எதிர்கால நகரம் என்று அழைக்கப்படும், இந்த சுல்தான் ஹைதம் சிட்டி சுமார் 50,000 வேலைகளை உருவாக்கும் என்றும், தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் வெளிநாட்டவர்கள் சொத்துக்களை சொந்தமாக வைத்திருக்க அனுமதிக்கும் என்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற திட்டமிடல் அமைச்சர் கல்பான் அல் ஷுயிலி அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும், சுல்தான் ஹைதம் சிட்டியின் முதல் கட்டத்திற்கான 60 சதவீத ஒப்பந்தங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். அதன்படி, இந்த திட்டமானது வரும் பத்து ஆண்டுகளில் ஒவ்வொரு கட்டமாக செயல்படுத்தப்பட்டு நிறைவேற்றப்படும் என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

குறிப்பாக, அரசு குடியிருப்பு நிலங்களை வழங்குவதற்கும், வெளிநாட்டு உரிமையை அனுமதிப்பதற்கும் தகுதியுடையவர்களுக்கு, நகரத்தில் உள்ள குடியிருப்புகளில் 5 சதவீதத்தை ஒதுக்குவதை சுல்தான் ஹைதம் சிட்டி நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் அல் ஷுயிலி கூறியுள்ளார்.

சுமார் 15 மில்லியன் சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டிருக்கும் சுல்தான் ஹைதம் சிட்டி, 2.9 மில்லியன் சதுர மீட்டருக்கு பசுமையான இடங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்துவதாகக் கூறப்படுகிறது. மேலும், 20,000 குடியிருப்பு பகுதிகளுடன் கிட்டத்தட்ட 100,000 குடியிருப்பாளர்களை இது கொண்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதில் இன்டிப்பென்டன்ட் வில்லாக்கள், செமி-அட்டாச்டு வில்லாக்கள், டவுன்ஹவுஸ்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் அடங்கும். அதே போல், ஓமானில் மேலும் நான்கு விலையாத்களில் இதே மாதிரி நகரங்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற திட்டமிடல் அமைச்சர் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.