சூயிங் கம் மற்றும் மிட்டாய்களில் சேர்க்கப்படும் டைட்டானியம் டை ஆக்சைடுக்கு ஓமானில் தடை!! மீறினால் 1,000 ரியால் அபராதம்..
ஓமானில் டைட்டானியம் டை ஆக்சைடு (E171) கலந்த உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யவோ, இறக்குமதி செய்யவோ அல்லது விற்கவோ தடையை அமல்படுத்தியுள்ளது. மேலும், விதியை மீறுபவர்களுக்கு 1,000 ரியால் அபராதம் விதிக்கப்படும் என்றும் ஓமானின் உணவு பாதுகாப்பு மற்றும் தரத்திற்கான மையம் எச்சரித்துள்ளது.
குறிப்பாக, உணவுப் பொருட்களுக்கு வெள்ளை நிறத்தைக் கொடுப்பதற்காக சில உணவுப் பொருட்களில் இது சேர்க்கப்படுவதாக ஆணையம் தெரிவித்துள்ளது. எடுத்துக்காட்டாக, தஹினி (Tahini), சூயிங் கம் மற்றும் சில இனிப்புகள் மற்றும் மிட்டாய்களில் இவை கலக்கப்படுவதாக ஆணையம் கூறியுள்ளது.
ஆகவே, இந்த கலவையானது ஒரு தயாரிப்பின் சேர்க்கையாக லேபிள்களில் பட்டியலிடப்பட்டிருக்கலாம் என்பதால், குடியிருப்பாளர்கள் தயாரிப்புகளில் ஒட்டப்பட்டிருக்கும் லேபில்களைப் படித்து வாங்குமாறு ஓமானின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர மையம் (Food Safety and Quality Centre) அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.