போலீஸ் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய இருவரை தூக்கிலிட்ட சவுதி அரேபியா!! குடிமக்களின் பாதுகாப்பு மிக முக்கியம் என்றும் அறிக்கை..!!
சவுதி அரேபியாவில் காவல்துறை அதிகாரி மற்றும் பாதுகாப்பு வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சவூதி அரேபிய நாட்டவர் இருவருக்கு மரண தண்டனை விதித்து சவூதி அரேபிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட குற்றவாளிகள் ஆயுதங்களை மறைத்து வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
நாட்டின் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த குற்றவாளிகளான அலி பின் சலே பின் அகமது அல் ஜுமா மற்றும் முஸ்லிம் பின் ஹுசைன் பின் ஹசன் அல் அபு ஷஹீன் ஆகிய இருவருக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனையின் படி, இருவரும் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று தூக்கிலிடப்பட்டுள்ளனர்.
சவுதி அரேபிய நாட்டு குடிமக்களை இதுபோன்ற குற்றங்களில் இருந்து விலக்கி வைப்பதற்காகவும், அவர்களின் பாதுகாப்பு மிக முக்கியமானது என்பதை வெளிநாட்டு குடியிருப்பாளர்களுக்கு தெரியப்படுத்துவதற்காகவும் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து உள்துறை அமைச்சகமும் அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.