UAE: வாகன உரிமையாளர்களுக்கு 4 நாட்கள் அவகாசம் அளித்துள்ள ஷார்ஜா..!! பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை விடுவிக்க இறுதி வாய்ப்பு…!!
ஷார்ஜாவில் போக்குவரத்து விதிமீறலில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை உரிமையாளர்கள் மீட்டெடுக்க அவர்களுக்கு கடைசி வாய்ப்பாக நான்கு நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஷார்ஜா முனிசிபாலிட்டி அதிகாரிகள் இந்த அறிவிப்பை சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ளனர்.
இந்த அறிவிப்பின்படி, ஷார்ஜா இண்டஸ்ட்ரியல் ஏரியா 5இல் உள்ள ஆய்வு மற்றும் கட்டுப்பாட்டுத் துறையை (inspection and control department) அணுகி, பறிமுதல் செய்யப்பட்டதற்கான காரணங்களைச் சரிசெய்து, 6 மாதங்களுக்கும் மேலாக விடுவிக்காத வாகனங்களை விடுவித்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, ஷார்ஜா சிட்டி முனிசிபாலிட்டியால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், என்ஜின்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மிதிவண்டிகள் போன்றவற்றை ஆறு மாதங்களுக்கும் மேலாக விடுவிக்க நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் உரிமையாளர்கள், இந்த நான்கு நாட்களைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இந்த வாய்ப்பை நழுவ விட்டால், ஜூலை 24/7/2023 இன்று தொடங்கி நான்கு நாட்களுக்குப் பிறகு பறிமுதல் செய்த வாகனங்களை ஷார்ஜா முனிசிபாலிட்டி பொது ஏலத்தில் விற்க நேரும் என்பது குறிப்பிடத்தக்கது.