1.1 மில்லியன் திர்ஹம்ஸ் மதிப்புள்ள நகைகளை நகைக்கடையில் கொள்ளையடித்த மூன்று வெளிநாட்டவர்கள்!! – 12 மணி நேரத்திற்குள் மடக்கி பிடித்த காவல்துறை!!
அமீரகத்தில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமையன்று நகைக்கடையில் சுமார் 1.1 மில்லியன் திர்ஹம் மதிப்பிலான நகைகளைத் திருடிய அரபு நாட்டைச் சேர்ந்த மூன்று வெளிநாட்டவர்களை அஜ்மான் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த துணிச்சல்மிக்க சம்பவம் நடந்த 12 மணி நேரத்திற்குள் திருடிய நபர்களை காவல்துறை கைது செய்துள்ளது.
மேலும், கொள்ளையர்கள் மூவரும் கடையில் இருந்த தங்க நகைகள் மற்றும் 40,000 திர்ஹம் ரொக்கம் ஆகியவற்றை திருடியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதிகாரிகள் அவர்களைக் கைது செய்தது மட்டுமின்றி, திருடப்பட்ட பொருட்களை அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்து உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளனர்.
திருட்டு சம்பவம் நடந்து 12 மணி நேரத்திற்குள் கைது செய்யப்பட்ட அந்த மூன்று பேரும், அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளுக்காக பொது வழக்கு பிரிவுக்கு காவல் துறையினரால் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், காவல்துறை நடத்திய விசாரணையில் நகைக்கடையின் உரிமையாளர் சென்ட்ரல் ஆப்பரேஷன் அறையுடன் இணைக்கப்பட்டிருந்த கடையின் அலாரம் சிஸ்டத்தை இயக்காமல் அலட்சியமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை அறிந்த சந்தேக நபர்கள், சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்தி திருட்டில் ஈடுபட்டுள்ளனர் என்பதும் தெரிய வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து வணிக உரிமையாளர்கள், குறிப்பாக விலையுயர்ந்த பொருட்களை கையாள்பவர்கள், தங்கள் நிறுவனங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு அஜ்மான் காவல்துறை வணிக உரிமையாளர்களை வலியுறுத்தியுள்ளது.