அமீரக செய்திகள்

துபாய்: வெறும் 13 நாட்களில் வரவிருக்கும் 3.3 மில்லியன் பயணிகள்..!! பயணிகளை எதிர்கொள்ள தயார் நிலையில் DXB..!!

அமீரகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படவருப்பதால் இந்த சமயத்தில் விடுமுறைக்காக மற்ற நாடுகள் சென்ற அமீரக குடியிருப்பாளர்கள் வரும் நாட்களில் திரும்புவார்கள் என்று கூறப்படுகிறது. இதனையொட்டி உலகின் மிக முக்கிய சர்வதேச விமான நிலையமான DXB, இன்னும் 13 நாட்களில் 3.3 மில்லியன் பயணிகளை வரவேற்கத் தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக கூட்ட நெரிசலைத் தவிர்க்க பின்வரும் முக்கிய குறிப்புகள் பயணிகளுக்கு விமான நிலையத்தால் வழங்கப்பட்டுள்ளது.

அதாவது, DXBயில் 4 மற்றும் 12 வயதுக்குட்பட்ட குழந்தை பயணிகள் டெர்மினல்கள் 1, 2 மற்றும் 3க்கு வந்தவுடன், அவர்களுக்கென பிரத்யேகமாக நிறுவப்பட்டுள்ள பாஸ்போர்ட் கட்டுப்பாட்டு கவுண்டர்களைப் பயன்படுத்தி தங்கள் பாஸ்போர்ட்டுகளை தானே ஸ்டாம்ப் செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.

அதேவேளை, குடும்பத்துடன் பயணம் செய்பவர்கள், 12 வயதுக்கு மேற்பட்ட பயணிகள், பாஸ்போர்ட் கட்டுப்பாட்டு செயல்முறையை விரைவுபடுத்த ஸ்மார்ட் கேட்களைப் பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

DXB இணையதளத்தின்படி, ஸ்மார்ட் கேட்களில், பதிவுசெய்யப்பட்ட பயணிகள் பச்சை விளக்கை நோக்கி முகத்தைக் காட்டுவதன் மூலம், ஆவணத்தை ஸ்கேன் செய்யாமலேயே பாஸ்போர்ட் கட்டுப்பாட்டை எளிதாகக் கடக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

வரும் நாட்களில் விமான நிலையத்தின் சராசரி தினசரி போக்குவரத்து 258,000 பயணிகளை எட்டும் என்றும், ஆகஸ்ட் 26 மற்றும் 27 தேதிகளில் அரை மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் வருவதால் மிகவும் பரபரப்பான நாட்களாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக துபாய் சர்வதேச விமான நிலையம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதுபோன்ற நெருக்கடியான நிலையில், பயணிகளுக்கு தடையற்ற பயணத்தை உறுதி செய்வதற்காக விமான நிலையத்தின் விமான நிறுவனங்கள், கட்டுப்பாட்டு அதிகாரிகள் மற்றும் வணிக மற்றும் சேவை கூட்டாளர்களுடன் இணைந்து பணியாற்றுவதாகக் கூறப்படுகிறது.

அத்துடன், விமான நிலையத்திலிருந்து விருந்தினர்களை அழைத்துச் செல்லும் குடியிருப்பாளர்கள் DXB இன் நியமிக்கப்பட்ட கார் பார்க்கிங் அல்லது வாலட் சேவைகளைப் பயன்படுத்துமாறு நினைவூட்டப்பட்டுள்ளனர். அதுபோல, டெர்மினல் 1 மற்றும் 3 இல் உள்ள வருகையாளர்களின் முன்பகுதிகளுக்கான அணுகல் பொது போக்குவரத்து மற்றும் பிற அங்கீகரிக்கப்பட்ட விமான நிலைய வாகனங்களுக்கு மட்டுமே என்பதையும் தெரிவித்துள்ளது.

அத்துடன் விமான நிலையத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பின்வரும் இரண்டு குறிப்புகளைப் பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவை:

  • இது போன்ற பீக் நேரங்களில் விமான நிலையத்தின் வழியாக செல்லும் சாலை பரபரப்பாக இருக்கும். எனவே, முடிந்த வரை DXB டெர்மினல்கள் 1 மற்றும் 3 இல் நிலையங்களைக் கொண்ட துபாய் மெட்ரோவைப் பயன்படுத்தவும்.
  • பயணிகள் ரைட்-ஹெய்லிங் ஆப்ஸ் மூலம் டாக்சிகள் அல்லது காரை வாடகைக்கு எடுக்கலாம்.

தொடர்ச்சியாக, ஒன்பதாவது ஆண்டாக சர்வதேச பயணிகள் போக்குவரத்தில் உலகின் சிறந்த விமான நிலையமாக தனது நிலையை தக்கவைத்துள்ளது துபாய் சர்வதேச விமான நிலையம். கடந்த 2022 ஆம் ஆண்டில் 66 மில்லியன் பயணிகளை விமான நிலையம் வரவேற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!