அமீரகத்தில் பெய்த ஆலங்கட்டி மழை..!! இன்றும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல்…!!
ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் சனிக்கிழமை பிற்பகல் வரை கனமழை பெய்யும் என்று தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) அறிவித்துள்ள நிலையில் கனமழை பெய்யும் பகுதிகளில் NCM மஞ்சள் மற்றும் ஆரஞ்சு வானிலை எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், வியாழக்கிழமை (நேற்று) பிற்பகலில் ஃபுஜைராவின் சில பகுதிகளில் ஆலங்கட்டி மழை மற்றும் பலத்த மழை பெய்துள்ளது, அதே நேரத்தில் துபாயில் தூசி நிறைந்த வானிலை நிலவியதாக கூறப்பட்டுள்ளது.
தற்போதைய வானிலை குறித்து NCMஇன் மூத்த வானிலை ஆய்வாளர் ஒருவர் கூறுகையில், கிழக்கில் உருவாகும் மேகங்கள் நாட்டின் பிற பகுதிகளுக்கும் விரிவடையும் என்பதால், நாளை (சனிக்கிழமை) ஃபுஜைரா முதல் ராஸ் அல் கைமா வரையிலான பகுதிகளிலும், அல் அய்ன் மற்றும் துபாய்க்கு இடைப்பட்ட பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன் பலத்த மழை மற்றும் புழுதிக் காற்று காரணமாக சாலைகளில் கிடைமட்டத் தெரிவுநிலை (visibility) குறையும் என்பதால், வாகன ஓட்டிகளை எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். மேலும் இன்றும் அமீரகத்தின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக மழையை உண்டாக்கக்கூடிய வெப்பச்சலன மேகங்களை NCM கண்காணித்து வருகிறது. மேற்பரப்பு வெப்பநிலை அதிகரிக்கும்போது, இந்த வெப்பச்சலன மேகங்கள் உருவாகும், அவை மேல்நோக்கி உயர்ந்து, ஒன்றன் மேல் ஒன்றாகக் குவிந்து இருக்கும்.
அவ்வாறு இருக்கையில், NCM நாட்டில் அதிக மழைப்பொழிவை ஏற்படுத்த, கிளவுட் சீடிங் விமானங்களை அனுப்புகிறது. இதனால் நாட்டின் பரவலான பகுதிகளில் மழைப்பொழிவு ஏற்படுகிறது.
இதுபோல, ஆகஸ்ட் மாதத்தில் இதுவரை 13 கிளவுட் சீடிங் நிறைவடைந்துள்ளன என்றும் ஜூன் மாதத்தில் இருந்து, நாட்டில் அதிகபட்ச மழைப்பொழிவுக்காக 22 விமானங்கள் அனுப்பப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.