அமீரக செய்திகள்

UAE: பொதுப் போக்குவரத்தில் எலெக்ட்ரிக் பஸ்ஸை அறிமுகப்படுத்திய ஷார்ஜா..!! கூடிய விரைவில் டெஸ்லா டாக்ஸிகள் அறிமுகப்படுத்தப்படும் எனவும் தகவல்….!!

ஷார்ஜாவில் பயணிகளுக்கு நிலையான போக்குவரத்து விருப்பங்களை வழங்குவதற்காக புதிதாக ஷார்ஜாவின் பொதுப் போக்குவரத்து குழுவில் புதிதாக இரண்டு எலெக்ட்ரிக் பஸ்கள் சேர்க்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் 10 எலக்ட்ரிக் கார்களை டாக்ஸி குழுவில் ஷார்ஜா சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) அறிமுகம் செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஷார்ஜா எமிரேட்டில் பயணிகளுக்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்கான அடுத்த கட்டமாக, இந்த புதிய வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 750க்கும் மேற்பட்ட இ-வாகனங்கள் இத்திட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கூடிய விரைவில் டெஸ்லா மாடல் S மற்றும் மாடல் 3 எலக்ட்ரிக் வாகனங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, புதிதாக சேர்க்கப்பட்டுள்ள போக்குவரத்து வசதிகளை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. அத்துடன் RTA வெளியிட்ட அறிக்கையில், எமிரேட்டின் பொது போக்குவரத்து நெட்வொர்க் ஒவ்வொரு குடியிருப்பு சமூகம், அரசு அலுவலகம் மற்றும் வணிக மாவட்டங்களுக்கு சேவை செய்வதுடன் சுற்றுச்சூழலுக்கு எந்தவித தீங்கையும் ஏற்படுத்தாமல் வசதியான, நம்பகமான மற்றும் பாதுகாப்பான அனுபவத்தை வழங்குவதாகக் குறிப்பிட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, ஷார்ஜாவில் மேற்கொள்ளப்படும் பசுமை போக்குவரத்து தீர்வுகளை நோக்கிய நடவடிக்கைகள் அனைத்தும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான எமிரேட்டின் அர்ப்பணிப்பை பிரதிபலிப்பதாக ஆணையம் கூறியுள்ளது. அதேவேளை, போக்குவரத்து உள்கட்டமைப்பின் தொடர்ச்சியான வளர்ச்சியும் தூய்மையான ஆற்றலின் மீதான நம்பிக்கையும் UAEயின் பசுமைப் பொருளாதாரத்தை நோக்கி மாற்றத்துடன் ஒத்திசைகிறது என்று RTA தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், போக்குவரத்துத் தலைவர்கள் டாக்ஸிகளின் மாற்று விகிதத்தை ஹைப்ரிட் ஆக மாற்ற திட்டமிட்டுள்ளதாகவும், இறுதியில் 100 சதவீதத்தை எட்டுவதை இலக்காகக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது கடந்த ஆண்டின் இலக்கான 65 சதவீதத்தை விட அதிகமாகும்.

மேலும், இந்த மாதம் RTA அதன் லிமோசின் சேவைக்காக சீன ஸ்கைவெல் (Chinese Skywell) எலெக்ட்ரிக் வாகனங்களை மூன்று மாத காலத்திற்குள் சோதனை செய்து வருவதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே, பிப்ரவரியில் துபாய் எமிரேட்டில் உள்ள அனைத்து டாக்ஸிகளும் 2027 க்குள் ஹைப்ரிட், எலக்ட்ரிக் அல்லது ஹைட்ரஜனில் இயங்கும் என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து துபாய் RTA வின் தலைவரும் இயக்குநருமான மத்தர் அல் தயர் அவர்கள் கூறுகையில், ஐந்தாண்டு திட்டமானது, ஐந்து ஆண்டுகளில் 100 சதவீத இலக்கை அடைய முழு டாக்ஸி குழுவையும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாகனங்களாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் தெரிவித்திருந்தார்.

Related Articles

Back to top button
error: Content is protected !!