துபாயில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!! தீ பற்றிய நிலையில் பெட்ரோல் நிலையம் வந்த பிக்-அப்..!! நூலிழையில் தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து..!!
துபாயில் உள்ள ஒரு எரிபொருள் நிலையத்தில் திடீரென ஏற்பட்ட வாகனத் தீயை அங்கிருந்த எரிபொருள் நிலைய ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு அணைத்துள்ள சம்பவம் அனைவரின் பாராட்டையும் பெற்றுளத்து. துபாயில் உள்ள ஒரு ENOC ஸ்டேஷன் அருகில் ஏற்பட்ட வாகன தீயை அணைப்பதற்கு அங்குள்ள ஊழியர்கள் மேற்கொண்ட விரைவான பதிலளிப்புக்காகவும், துணிச்சலான செயலுக்காகவும் துபாய் காவல்துறையினர் அவர்களை கவுரவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக துபாய் காவல்துறை வெளியிட்டுள்ள வீடியோவில், டெம்போ டிரக் எரிபொருள் நிரப்புவதற்காக பெட்ரோல் நிலையத்திற்குள் நுழைவதைப் பார்க்கலாம். டிரக் ஸ்டேஷனுக்குள் செல்லும்போது, அதன் இடப்பக்க டயரில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.
மேலும், டயர் தீப்பற்றிய நிலையில் டிரைவர் பெட்ரோல் நிலையத்திற்குள் டிரக்கை நிறுத்துகிறார். இதைப் பார்த்த ஸ்டேஷன் ஊழியர்கள், தீயணைக்கும் கருவிகளை எடுத்துக் கொண்டு டிரக்கை நோக்கி விரைந்தனர். அதேசமயம், டிரக் டிரைவர் என்ன நடக்கிறது என்று தெரியாமல் டிரக்கிலிருந்து கீழே இறங்கும் காட்சிகளும் கேமராவில் பதிவாகியுள்ளது.
View this post on Instagram
இவ்வாறு ஸ்டேஷன் ஊழியர்கள் தீயை அணைக்க தொடர்ந்து பல முயற்சிகளையும் மேற்கொண்டதும், ஒருவழியாக டயரில் ஏற்பட்ட தீயை அணைத்ததும் பெட்ரோல் நிலையத்தில் ஏற்படவிருந்த பெரும் அசம்பாவிதத்தை தடுத்துள்ளது.
எனவே, காவல்துறை அந்த பெட்ரோல் ஸ்டேஷன் ஊழியர்களின் திறமையான நடவடிக்கைகளைப் பாராட்டி, அவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கியுள்ளது. துபாய் காவல்துறை வழங்கிய அங்கீகாரத்திற்காக ஊழியர்களும் தங்கள் நன்றியை தெரிவித்துள்ளனர்.
மேலும், டிரக் டயரில் எப்படி தீப்பற்றியது மற்றும் எப்போது நடந்தது என்பது பற்றிய கூடுதல் விவரங்களை காவல்துறை வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.