அமீரக செய்திகள்

அன்று காணும் இடமெல்லாம் மணல் சாலை..!! இன்று உலகத்தரம் வாய்ந்த நவீன சாலை..!! துபாயின் முதல் டிராஃபிக் லைட் எது தெரியுமா..??

துபாய் என்றாலே நவீன கட்டடங்களும் சுத்தமான உயர்தர சாலைகளும் தான் உடனடியாக நம் அனைவரின் எண்ணத்திலும் தோன்றும். துபாயில் வசித்திருந்த முந்தைய தலைமுறையினர் அப்போதைய துபாய் பற்றி கூறும்போது ஒரு சில தகவல்கள் நம்ப முடியாத அளவுக்கு கூட இருக்கும்.

அன்றைய கால கட்டத்தில் பல இடங்களில் சாலை வசதிகளும் மின்சார வசதிகளும் இல்லாமலேயே இந்த பாலைவன நாட்டில் பலரும் தங்களது வாழ்வைக் கழித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். அவ்வாறு இருந்த துபாய் இன்று மிகவும் குறைந்த வருடங்களிலேயே எவரும் எண்ணிப்பார்க்காத உயரத்தை எட்டியிருக்கின்றது.

இத்தகைய அசுர வளர்ச்சியடைந்த துபாயில் அருமையான சாலைகளுக்கு அருகில் கம்பீரமாக எழுந்து நிற்கும் பைனான்சியல் சென்டர் (Financial Centre) மற்றும் பிசினஸ் பே (Business Bay) போன்ற துபாயின் வர்த்தக மையங்கள் துபாயிட் தொடக்க காலத்தில் பர் துபாயில் ஒரு சிறிய மணல் சாலையில் க்ரீக் சூக்கின் கிளையாக செயல்பட்டதாக நீண்ட காலமாக துபாயில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், அதே பெயரில் உள்ள பகுதிக்கு அல் ஃபஹிதி ஸ்ட்ரீட் என்று பெயரிடப்பட்டிருந்ததாகவும், அது எலக்ட்ரானிக்ஸ், கடிகாரங்கள், குளிரூட்டிகள், வீட்டுப் பொருட்கள், ஆடைகள் மற்றும் எழுதுபொருட்கள் போன்றவற்றை வாங்குவதற்கு செல்லக்கூடிய நகரமாக விளங்கியதாகவும் கூறியுள்ளனர்.

துபாயின் தொடக்க காலங்களில் தெரு விளக்கு வசதிகள் கூட குறைவுதானாம், அதாவது நீண்ட தொலைவில் தெரு விளக்குகள் இருந்துள்ளன. மேலும், இன்று துபாயில் இருப்பது போன்ற சாலை வசதிகளோ, நடைபாதை வசதிகளோ எழுபதுகளில் கிடையாது என்றும் அன்றைய காலகட்டத்தில் போக்குவரத்து சிக்னல்கள் கூட இருந்ததில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி எழுபதுகளின் பிற்பகுதி வரை, இப்போது துபாய் அருங்காட்சியகம் அமைந்துள்ள பகுதிக்கு அருகில் 34வது தெரு ஃபாஹிதி ஸ்ட்ரீட் சந்திப்பில் தான் துபாய் அதன் முதல் போக்குவரத்து சிக்னல் வசதியைப் பெற்றதாகக் கூறப்படுகிறது.

அந்த போக்குவரத்து சிக்னல்கள் உருவாக்கிய சலசலப்பு பற்றியும் அங்கிருந்த ‘Kings’ எனப்படும் கன்வீனியன்ஸ் ஸ்டோரின் உரிமையாளராக இருந்த ஹேம்சந்த் கரனி என்பவர் நினைவு கூர்ந்துள்ளார். இரவு நேரங்களில் அவை அணைக்கப்படும் என்றாலும், அங்கு வாகனங்களின் நெரிசலைக் கட்டுப்படுத்துவதில் அவை பெரும் பங்கு வகித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இறுதியாக, தொண்ணூறுகளில் கிங்ஸ் ஸ்டோரின் செயல்பாடுகளை முடித்த பிறகு, ஹேம்சந்த் கரனி  கலீஜ் சென்டரில் பென்ஸ் கார்னரை (Pens Corner) திறந்து அவரது மகனான பாரத் கரணியிடம் ஒப்படைத்துள்ளார். இப்போது அதை பாரத் கரணி நடத்தி வருகிறார். எனவே, பாரத் கரணியும் எண்பது, தொண்ணூறுகளில் இருந்தே குறிப்பாக அவரது பத்து வயதிலிருந்தே துபாயின் படிப்படியான வளர்ச்சியைக் கண்கூடாக பார்த்திருக்கிறார்.

இது குறித்த அவரது சிறு வயது நினைவலைகளைப் பகிர்ந்து கொண்ட போது, அவரது கடைக்கு வெளியே அந்த சாலை சந்திப்பில் முதன் முதலாக போக்குவரத்து சிக்னல் வந்ததில் இருந்து பாதசாரிகள் புதிய தார் சாலையை பாதுகாப்பாகக் கடக்க முடிந்ததாகவும், அந்த இடத்திற்கு சிறிது போக்குவரத்து ஒழுங்கைக் கொண்டு வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த போக்குவரத்து விளக்குகள் இரவில் மூடப்பட்டு பின்னர் மீண்டும் காலை 6 மணிக்கு இயக்கப்படும் என்றும், அவை மேனுவலாக (Manual) இயக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் “இன்று துபாய் வியத்தகு முறையில் வளர்ந்திருக்கும் என்று அன்று யாரும் கற்பனை செய்திருக்க மாட்டார்கள். அன்று மிக எளிமையான நாட்கள், அன்றைய துபாயில் விஷயங்கள் முற்றிலும் வேறுபட்டவை. இன்று ஒவ்வொரு முறையும் நான் அல் ஃபாஹிதி தெருவில் வரலாற்று போக்குவரத்து சிக்னல் வழியாக கடந்து செல்லும் போதும் பழைய நினைவுகள் அன்றைய இனிமையான நாட்களுக்கு என்னை கூட்டிச் செல்லும்” என்றும் அவர் நெகிழ்ந்துள்ளார்.

இவர்களைப் போன்றே எண்ணற்ற நபர்களின் நினைவடுக்கில் துபாய் என்று சொன்னால் அன்றைய கால துபாய் அவ்வப்போது வந்து போகும் என்பது மறக்க முடியாத நிகழ்வாகும்.

Related Articles

Back to top button
error: Content is protected !!