அமீரக கோல்டன் விசாவைப் பெற்றார் தமிழக செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த்..!!
அமீரகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 12) அன்று புகழ்பெற்ற இந்திய செஸ் வீரரான விஸ்வநாதன் ஆனந்த் அவர்களுக்கு, ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், துபாய் அவரது இரண்டாவது அதிகாரப்பூர்வ இல்லமாக மாறியுள்ளது.
இது குறித்து கூறுகையில் “அமீரக கோல்டன் விசாவைப் பெற்ற கிறிஸ்டியானோ ரொனால்டோ, லூயிஸ் ஃபிகோ, நோவக் ஜோகோவிச் மற்றும் பால் போக்பா போன்ற உலகளாவிய விளையாட்டு ஜாம்பாவன்களின் பட்டியலில் ஒருவராக இடம்பிடித்ததில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன் மற்றும் அமீரகத்தில் பல செஸ் போட்டிகள் நடைபெறுகின்றன, எனவே கோல்டன் விசா கிடைத்திருப்பது எனக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்” என்று விஸ்வநாதன் ஆனந்த் கூறியுள்ளார்.
கோல்டன் விசாவைப் பெற்றதையடுத்து, செய்தி ஊடகங்களிடம் பேசிய ஆனந்த், துபாயுடனான தனது பல்வேறு அனுபவங்கள் பற்றியும் செஸ் பற்றியும் விரிவாகப் பேசினார். அவர் பேசிய போது, முதன்முதலில் உலக ஜூனியர் சாம்பியன்ஷிப்பிற்காக 15 வயதில் துபாய்க்கு வந்ததாகவும், 38 ஆண்டுகளுக்கு முன்பு மணல் திட்டுகள் மற்றும் ஆங்காங்கே குறுகிய சாலைகளுடன் காட்சியளித்த துபாய் இப்போது உலகின் பிரபலமான நகரங்களில் ஒன்றாக பாரிய வளர்ச்சியைக் கண்டிருப்பதாகப் பழைய நினைவுகள் பற்றி பகிர்ந்துள்ளார்.
தொடர்ந்து பேசுகையில், சமீபத்தில் துபாயில் நடந்த டெக் மஹிந்திரா குளோபல் செஸ் லீக், செஸ்ஸை புதிய பார்வையாளர்களிடம் கொண்டு செல்வதற்கான மிகவும் புத்திசாலித்தனமான முயற்சி என்றும் பாராட்டியுள்ளார். குளோபல் செஸ் லீக் மட்டுமல்ல, 2021 FIDE உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியும் துபாய் எக்ஸ்போவின் போது அரங்கேறியுள்ளது. விஸ்வநாதன் ஆனந்த் அவர்கள் FIDEஇன் துணைத் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு செஸ் விளையாட்டு மட்டுமின்றி, உலகின் முன்னணி விளையாட்டுக்கான முக்கிய களங்களில் ஒன்றாக அமீரகம் மாறியுள்ளது. குறிப்பாக, துபாய் மற்றும் அபுதாபி ஆகியவை கோல்ஃப், டென்னிஸ், கால்பந்து, ரக்பி, ஃபார்முலா ஒன், ப்ரீ-சீசன் NBA கேம்கள் மற்றும் UFC போன்ற மிகப்பெரிய சர்வதேச நிகழ்வுகளை நடத்துகின்றன. இது பற்றிய அவரது கருத்தைப் பகிர்ந்தபோது, ” துபாய் ஒரு சிறந்த இடம் என்று நினைக்கிறேன். அனைத்து முக்கிய விளையாட்டுகளும் இங்கு வருவது முக்கியம். மேலும், சில முக்கிய செஸ் நிகழ்வுகள் பைப்லைனில் உள்ளன, அவற்றில் பல அமீரகத்திங் நடைபெறும் என்று நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அதனையடுத்து, இந்தியாவின் செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா பற்றியும் அவரது திறமைப் பற்றியும் பேசிய விஸ்வநாதன் ஆனந்த், உலகக் கோப்பை செஸ் போட்டியில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இளம் வீரர் என்ன பெயரை பிரக்ஞானந்தா பெற்றிருக்கிறார். இத்தகைய சாதனையை விரைவிலேயே செய்யக்கூடிய ஆற்றல் அவரிடம் இருந்தது. எனவே, அவர் இறுதிப் போட்டிக்கு வந்தது எனக்கு ஆச்சரியமாக இல்லை” என்றும் தெரிவித்துள்ளார்.