ஐக்கிய அரபு அமீரகத்தில் சமூக வலைத்தளங்களில் விளம்பரம் செய்து கள்ள நோட்டுகளை விற்ற மோசடி கும்பலுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்திய ஃபெடரல் கேபிடல் பப்ளிக் பிராசிகியூஷன், பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளது.
குடியிருப்பாளர்களை ஏமாற்றியவர்களிடையே நடத்தப்பட்ட விசாரணையில், தள்ளுபடிச் சலுகையுடன் நாணயங்களைப் பரிமாற்றம் செய்யலாம் என்று சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்து, குடியிருப்பாளர்களின் ஆசையைத் தூண்டி கவர்ந்து சென்றிருப்பது தெரிய வந்துள்ளது.
50சதவீதம் வரையிலான சலுகை என்ற விளம்பரத்தைப் பார்த்ததும் மோசடி வலையில் விழும் குடியிருப்பாளர்கள், சந்தேக நபர்கள் அழைக்கும் இடத்திற்குச் சென்று உண்மையான அமீரக திர்ஹம்களைக் கொடுத்துவிட்டு போலி நாணயங்களை வாங்கி ஏமாந்திருப்பதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து சந்தேக நபர்கள் தப்பிச் சென்ற பின்னரே, தாங்கள் ஏமாற்றப்பட்டதை குடியிருப்பாளர்கள் உணர்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, இதுபோன்ற போலியான சலுகைகளை நம்பி மோசடி கும்பலின் தந்திரத்திற்குப் பலியாகாமால், உரிமம் பெற்ற அதிகாரிகள் மூலம் கரன்சிகளை பரிமாற்றம் செய்யுமாறு குடியிருப்பாளர்களை அமீரக பொது வழக்குத்துறை அறிவுறுத்தியுள்ளது.
மேலும், சமூக ஊடகங்களில் உலவும் தனிநபர்களை நம்ப வேண்டாம், குறிப்பாக வேகமாக பணம் சம்பாதிக்க முயலும் நபர்களை நம்ப வேண்டாம் என்று பரிந்துரைத்துள்ளது.