வாகன ஓட்டிகளுக்கு காவல்துறை விடுத்துள்ள எச்சரிக்கை..!! இந்த விதியை மீறினால் 1,500 திர்ஹம் அபராதம்..!!
மற்ற நாடுகளை விட அதிகமாக வெயில் கொளுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் வாகனங்களுக்கு விண்டோ டின்ட் (window tint) செய்யப்படுவது பிரபலமான ஒன்றாக இருந்தாலும் அதற்கென சில விதிமுறைகளும் உள்ளன. பெரும்பாலான வாகனங்கள் பொதுவாகவே அதிகபட்சம் 30 சதவீதம் வரை டின்ட் செய்யப்பட்டு வருகின்றன.
இருப்பினும், அமீரகத்தின் சட்டம் ஒவ்வொரு வாகனத்திற்கும் குறிப்பிட்ட சில சதவீத டின்டிங்கை மட்டுமே அனுமதிக்கிறது. இந்த விதியை மீறும் வாகன ஓட்டிகளுக்கு 1,500 திர்ஹம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், உம் அல் குவைன் காவல் துறையினர் விண்டோ டின்ட் குறித்து சட்டம் என்ன கூறுகிறது என்பது பற்றிய நினைவூட்டலை வாகன ஓட்டிகளுக்கு வழங்கியுள்ளனர். குறிப்பாக, வாகனங்களில் 50 சதவீதத்திற்கு மேல் டின்ட்டிங் செய்வது அனுமதிக்கப்படாது என்றும், இது வாகனத்தின் விண்ட்ஷீல்டில் உள்ள கண்ணாடிக்கும், அதே போல் பக்கத்திலும் பின்புறத்திலும் உள்ள கண்ணாடிக்கும் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விதிமீறல்கள்:
- அமீரகத்தில் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட அளவுக்கு அப்பால் விண்டோ டின்டிங்கின் சதவீதத்தை அதிகரித்தல்
- பெய்ண்ட்டிங் செய்ய அனுமதிக்கப்படாத வாகனத்தை பெய்ண்ட்டிங் செய்தல்.
மேற்கூறிய விதிமீறல்கள் புரிந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது. அதுமட்டுமின்றி, வாகனங்களை வெயிலில் நிறுத்தும்போது குளிர்ச்சியாக இருக்க கண்ணாடியில் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்தும் நபராக இருந்தால், வாகனம் ஓட்டுவதற்கு முன் அதை முழுவதுமாக அகற்றி விட வேண்டும் என்றும் இல்லையெனில், உங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் ஆணையம் எச்சரித்துள்ளது.