சாலைகளில் தேங்கிய மழைநீர்.. ஒரு சில மணிநேரங்களிலேயே முற்றிலும் அகற்றிய துபாய் முனிசிபாலிட்டி!! துபாய்னா வேற லெவல் தான்..
ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக கனமழைக் கொட்டி தீர்த்த நிலையில், துபாயில் ஆங்காங்கே நீர் தேங்கிக் கொண்டு குடியிருப்பாளர்களுக்கு இடையூறாக இருந்து வந்தது. இதனை அறிந்த துபாய் முனிசிபாலிட்டியின் அவசரக்குழு உடனடியாக விரைந்து களத்தில் இறங்கி, சில மணி நேரங்களிலேயே தேங்கியிருந்த தண்ணீரை அகற்றியுள்ளது.
இந்த அவசரக் குழுவில் 484 சிறப்புப் பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் 1,150 தொழிலாளர்கள் பணியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
துபாயின் மழைநீர் வடிகால் அமைப்புகள் 4 மில்லியனுக்கும் அதிக நீளமான மீட்டர் அளவில் 72,000 மழைநீர் வடிகால் மற்றும் 35,000 ஆய்வு அறைகளை கொண்டவையாகும். இவை அனைத்தும் 59 லிஃப்டிங் மற்றும் பம்பிங் ஸ்டேஷனில் சந்திப்பதாகவும், 38 முறையான வெளியேற்றங்கள் வழியாக நீர்நிலைகளுக்கு அனுப்பப்படுவதாகவும் கூறப்படுகிறது.
சமீபத்தில் பெய்த மழையினால், கழிவுநீர் மற்றும் மழைப்பொழிவு அமைப்பின் ஒருங்கிணைந்த நிர்வாகத்தை வலுப்படுத்தும் நோக்கத்துடன் 24 மணி நேர செயல் திட்டம் தொடங்கப்பட்டதாக கூறப்பட்டிருந்தது. அதில் ஒருங்கிணைந்த நடைமுறைகள் மற்றும் அவசரநிலைகளுக்கான விரைவான பதிலளிப்பு வழிமுறைகள் ஆகியவை அடங்கும்.
இதன்மூலம் துபாய் முழுவதும் மழை நீர் காரணமாக ஏற்படும் குடியிருப்பாளர்களின் பிரச்சனைகளுக்கு விரைவாகப் பதிலளித்து, பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்கு துபாய் முனிசிபாலிட்டியின் அவசரக் குழு எப்போதும் தயாராக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், இதுவரை இது தொடர்பான புகார்களாக 279 அழைப்புகளைக் கையாண்டதாக அவசரக் குழு தெரிவித்துள்ளது.
அத்துடன் எமிரேட் முழுவதும் தேங்கியுள்ள நீரை வெளியேற்றவும் அடைப்பை அகற்ற 15 உபகரணங்கள், கிரேன் கொண்ட ஏழு டிரக்குகள், நீர் போக்குவரத்துக்கு 49 தொட்டிகள், 87 கேரி பம்புகள், 74 போர்ட்டபிள் பம்புகள், பல்வேறு வகையான 63 போக்குவரத்து வாகனங்கள், 60 க்கும் மேற்பட்ட பிக்கப்கள் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்களையும் தயார் நிலையில் வைத்திருப்பதாகவும் துபாய் முனிசிபாலிட்டி தெரிவித்துள்ளது.
குறிப்பாக, தேரா மற்றும் துபாய் முழுவதும் 20 தண்ணீர் பம்புகள் உள்ளன என்றும் எமிரேட்டில் சீரற்ற வானிலை நிலவும் போது அவசரநிலையைச் சமாளிக்க முனிசிபாலிட்டி அனைத்து குழுக்களையும் இயந்திரங்களையும் தயார் செய்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, குடியிருப்பாளர்கள் துபாய் 24/7 செயலியைப் பயன்படுத்தி மழைநீர் தேங்குவது மற்றும் அடைப்பு குறித்து புகாரளிக்கலாம் அல்லது 800900 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என்று நகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel