அமீரக செய்திகள்

UAE: வருடம் முடிவதற்குள் கட்டாயம் எமிராட்டிகளை பணியமர்த்த வேண்டும்.. குறிப்பிட்ட தனியார் நிறுவனங்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்படும் என அரசு எச்சரிக்கை..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களில் அமீரக குடிமக்களை கட்டாயம் பணியமர்த்தி இருக்க வேண்டும் என்ற சட்டமானது கடந்த வருடத்தில் இருந்து நடைமுறைக்கு வந்துள்ளது. இதனடிப்படையில் ஒவ்வொரு வருடமும் எமிராட்டி ஊழியர்களின் எண்ணிக்கை அரசு அறிவித்திருக்கும் சதவீதத்தை பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகம் (MoHRE) தனியார் துறை நிறுவனங்கள் திறமையான எமிராட்டி  ஊழியர்களை பணியமர்த்துவதற்கான காலக்கெடு நெருங்கி வருவதை நினைவூட்டியுள்ளது. இதுவரை 18,000 நிறுவனங்கள் தங்கள் இலக்குகளை எட்டியுள்ளதாக தெரிவித்த MoHRE, இன்னும் தங்கள் இலக்குகளை அடையாத நிறுவனங்கள் வேலை தேடும் எமிராட்டிகளைத் தேடுவதற்கு நஃபிஸ் தளத்தைப் (nafis) பயன்படுத்தலாம் என்று ஆலோசனை வழங்கியுள்ளது.

MoHREயின் படி, அமீரகத்தில் 50 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்களைக் கொண்ட நிறுவனங்கள் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் 4 சதவீத திறமையான எமிராட்டி ஊழியர்களைப் பணியமர்த்தியிருக்க வேண்டும்.

அதாவது, 2026 ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு ஆண்டும் 2 சதவீத எமிராட்டி ஊழியர்களை நிறுவனங்கள் பணியமர்த்த வேண்டும் என்று அமைச்சகம் இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், இப்போது ஆண்டின் முதல் பாதியில் 1 சதவீதத்தையும், இரண்டாவது பாதியில் மற்ற 1 சதவீதத்தையும் சேர்க்குமாறு இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஒரு புதிய வழிமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒவ்வொரு ஆண்டும் இலக்கை எட்டாததற்காக விதிக்கப்படும் அபராதம் மாதம் 1,000 திர்ஹம் அதிகரிக்கிறது, கடந்த ஆண்டு 6,000 திர்ஹம் இருந்த அபராதம், இந்த ஆண்டு 7,000 திர்ஹம் ஆக உள்ளது.

எனவே, வருடத்தின் முதல் ஆறு மாதங்களால் 7,000 பெருக்கப்பட்டு பணியமர்த்தப்படாத ஒவ்வொரு எமிரேட்டிக்கும் 42,000 திர்ஹம்கள் அபராதம் விதிக்கப்படுகிறது. அந்தவகையில், நடப்பு ஆண்டின் இரண்டாம் பாதியில் டிசம்பர் 31 க்கு முன் இலக்கை எட்டாத நிறுவனங்கள், பணியமர்த்தப்படாத ஒரு எமிராட்டி ஊழியருக்கு 42,000 கூடுதல் அபராதம் விதிக்கப்படும் என்று அமைச்சகம் எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக வெளியான புள்ளிவிபரங்களின் படி, 2022 ஆம் ஆண்டின் எமிரேடிசேஷன் இலக்குகளை அடையத் தவறிய தனியார் நிறுவனங்களுக்கு அமைச்சகம் 400 மில்லியன் திர்ஹம்கள் அபராதம் விதித்துள்ளது. இந்த முயற்சியின் விளைவாக, தற்போது 84,000 க்கும் மேற்பட்ட அமீரகக் குடிமக்கள் தனியார் துறையில் பணிபுரிவதாகவும், கடந்த இரண்டு ஆண்டுகளில் 54,000 க்கும் அதிகமானோர் வேலை பெற்றுள்ளதாகவும் அமைச்சகம் கூறியுள்ளது.

அதேசமயம், இலக்கை எட்டுவதற்காக சுமார் 565 நிறுவனங்கள் மொத்தம் 824 எமிராட்டி ஊழியர்களை போலியாக வேலைக்கு அமர்த்தியது நிரூபிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சகம் கூறியுள்ளது. இதற்கு 20,000 திர்ஹம் முதல் 100,000 திர்ஹம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் அமைச்சகம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!