2024 முதல் துபாய் மாலில் புதிய கார் பார்க்கிங் முறை அறிமுகம்.. எமார்ஸ் உடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட சாலிக்..!!
துபாய் டோல்-கேட் ஆபரேட்டரான சாலிக் (salik), எமார் மால்ஸ் (Emaar Malls) உடனான ஒப்பந்தத்தின் மூலம், துபாய் மாலில் வாடிக்கையாளர்களுக்கு தடையற்ற பார்க்கிங் அனுபவத்தை வழங்குவதற்காக சிறந்த தொழில்நுட்ப அமைப்பை செயல்படுத்த உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது, வாகனத்தின் நம்பர் பிளேட் அங்கீகாரத்தைப் பயன்படுத்தி, டிக்கெட் இல்லாத பார்க்கிங்கிற்கான ஆட்டோமேட்டிக் கட்டணம் சாலிக் பயனர் கணக்குகளில் இருந்து வசூலிக்கப்படும் என்று கூறப்படுகிறது. அதேபோல், மாலில் நவீன அமைப்பை நிறுவுதல், வடிவமைப்பு, நிதி, மேம்பாடு மற்றும் நிர்வகித்தல் ஆகியவை ‘சாலிக்’ அமைப்பால் கையாளப்படும் என்றும் கூறப்படுகிறது.
மேலும், இந்த நவீன அமைப்பு துபாய் மாலில் 2024ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டிற்குள் செயல்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஆகவே, மாலுக்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்களின் பார்க்கிங் கட்டணத்தை செலுத்த கியோஸ்க்குகள் மற்றும் இயந்திரங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியமின்றி சாலிக் மூலம் எளிதாக கட்டணத்தை செலுத்திக் கொள்ளலாம்.
இது குறித்து சாலிக் நிறுவனத்தின் CEO இப்ராஹிம் சுல்தான் அல் ஹடாத் என்பவர் பேசுகையில், துபாயில் உள்ள ஓட்டுநர்களுக்கு நிலையான மற்றும் ஸ்மார்ட் மொபைலிட்டி தீர்வுகளை வழங்குவதற்கான நிறுவனத்தின் உத்திக்கு இந்தத் திட்டம் முக்கியமானது என்று குறிப்பிட்டுள்ளார்.
மற்ற மால்களிலும் விரிவுபடுத்துதல்:
எமார் மால்ஸ் உடனான சாலிக் நிறுவனத்தின் ஒப்பந்தம் அதன் உயர்மட்ட வளர்ச்சியை விரிவுபடுத்தும் ஒரு பகுதியாகும். சாலிக் முதலில் அதன் நவீன அமைப்பை துபாய் மாலில் நிறுவி, பின்னர் அதிலிருந்து பெறப்படும் அனுபவங்களை பயன்படுத்தி, நகரத்தில் உள்ள மற்ற இடங்களுக்கு விரிவுபடுத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது.
துபாய் மால் தற்போது 13,000 க்கும் மேற்பட்ட பார்க்கிங் இடங்களுடன் ஐந்து பார்க்கிங் மண்டலங்களை கொண்டுள்ளது. இப்போது வரும் இந்த புதிய தீர்வு, துபாய் மாலில் பார்க்கிங் கேட் உள்ளிட்ட தடைகளை நீக்கி விடுமுறை தினங்கள் உள்ளிட்ட பீக் ஹவர்ஸில் வாகன நெரிசலைத் தவிர்க்க உதவும் என்றும் கூறப்படுகிறது.
புதிய அமைப்பு செயல்படும் விதம்:
- உங்கள் வாகனம் நுழையும் இடத்திற்கு வரும்போது, ஒரு கேமரா நம்பர் பிளேட் எண்ணைப் படம்பிடிக்கும்.
- சாலிக் அமைப்பு படத்தை செயலாக்கும் மற்றும் பிளேட் எண்ணை அங்கீகரித்து நுழைவு நேரத்தை பதிவு செய்யும்.
- இறுதியாக, வாகனம் வெளியேறும் போது, கணினி மீண்டும் பிளேட் நம்பரை ஸ்கேன் செய்து, தங்கிய நேரம் பதிவு செய்யப்படும்.
- அதையடுத்து, பார்க்கிங் மேனேஜ்மென்ட் சிஸ்டம் (PMS) கார் பார்க்கிங் விதிகளின் அடிப்படையில் பார்க்கிங் கட்டணத்தைக் கணக்கிட்டு, பிளேட் எண்ணை சாலிக் கணக்குடன் இணைத்து, சாலிக் கணக்கிலிருந்து கட்டணத்தைக் கழிக்கும்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel