துபாயில் இருந்து ஷார்ஜா செல்பவர்கள் கவனத்திற்கு.. பேருந்து தற்காலிகமாக இடைநிறுத்தம்.. போக்குவரத்தும் மாற்றம்…
அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், முக்கிய சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் துபாய் மற்றும் ஷார்ஜா இடையே பேருந்து சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, நாட்டில் மோசமான வானிலை நிலவுவதால், E315 பஸ் ரூட் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒரு முக்கிய துபாய்-ஷார்ஜா சாலையில் போக்குவரத்தும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. RTAவின் கூற்றுப்படி, ஷார்ஜாவில் உள்ள ஷேக் முகமது பின் சையத் சாலையில் மழை வெள்ளம் குளம் போல் தேங்கியிருப்பதால், டிரிபோலி ஸ்ட்ரீட் (Tripoli Street) வழியாக எமிரேட்ஸ் சாலைக்கு போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.
இதனிடையே ஷார்ஜா காவல்துறை, ஷார்ஜா மலிஹா சாலை, ஷார்ஜா அல் தைத் மற்றும் கோர் ஃபக்கான் சாலை ஆகிய முக்கிய சாலைகளுக்குச் செல்லும் அனைத்து வெளியேறும் சுரங்கப்பாதைகளும் மழைநீர் தேங்கியதால் மூடப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
தொடர்ச்சியாக நாட்டைத் தாக்கும் நிலையற்ற வானிலை இன்று உச்சமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், குடியிருப்பாளர்கள் அவசியமான காரணங்களைத் தவிர மற்ற நேரங்களில் வீட்டிலேயே இருக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel