அமீரக செய்திகள்

அமீரகத்தில் விரைவில் வரவுள்ள ‘பறக்கும் ட்ராஃபிக் சிக்னல்’ மற்றும் ‘ரோபோ ஸ்னைப்பர்’..!! உலக போலீஸ் உச்சி மாநாட்டில் காட்சிக்கு வைப்பு..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் அவசரநிலையின் போது, போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த பறக்கக்கூடிய ஸ்மார்ட் ட்ராஃபிக் சிக்னல் ட்ரோன் விரைவில் அறிமுகப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. துபாயில் உள்ள உலக வரத்தக மையத்தில் செவ்வாய்கிழமை (மார்ச் 5) அன்று தொடங்கப்பட்ட உலக போலீஸ் உச்சி மாநாட்டில் (World Police Summit – WPS) இந்த நவீன படைப்பு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இது பற்றி ஊடகங்களிடம் தெரிவித்த உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், இந்த ‘ட்ராஃபிக் சிக்னல் ட்ரோன்’ சாலையில் அவசரநிலை ஏற்படும் போது அல்லது சந்திப்பில் உள்ள போக்குவரத்து விளக்குகள் பழுதடையும் போது தற்காலிக சிக்னலாக பயன்படுத்தப்படலாம் என்று விளக்கமளித்துள்ளார்.

FBI, NYPD மற்றும் INTERPOL உட்பட 138 நாடுகளில் இருந்து உயர்மட்ட காவல்துறை அதிகாரிகள் குழு பங்கேற்கும் இந்த மூன்று நாள் உச்சி மாநாட்டில், சமீபத்திய காவல் தொழில்நுட்பம், இணையப் பாதுகாப்பு மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆகியவை காட்சிப்படுத்தப்படுகின்றது.

மேலும், உலகெங்கிலும் உள்ள காவல்துறை தலைவர்களிடையே குற்றத் தடுப்பு, தடயவியல் மற்றும் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளைப் பற்றிய விவாதங்களும் இந்த உச்சி மாநாட்டில் நடைபெறும் எனவும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் ட்ராஃபிக் சிக்னல் ட்ரோனின் அம்சங்கள்:

3D பிரிண்டட் ட்ராஃபிக் சிக்னல் அமைப்பை ஒரு முறை சார்ஜ் செய்தால் போலீஸ் ரோந்து வாகனம் அந்தப் பகுதியை அடையும் வரை கிட்டத்தட்ட 25 நிமிடங்கள் வேலை செய்யும் என்று கூறப்பட்டுள்ளது.

இது பற்றி துபாய் காவல்துறையின செய்தித் தொடர்பாளர் கூறியதாவது: “அமீரகத்தில் இது மாதிரியான அமைப்பை செயல்படுத்துவது இதுவே முதல் முறையாகும். எல்லாம் சரியாக நடந்தால், விரைவில் இதன் சோதனையைத் தொடங்குவோம். மேலும், விரைவில் இது பயன்பாட்டிற்கு வரும் என்று நம்புகிறோம்” என்றும் தெரிவித்துள்ளார்.

நவீன கேட்ஜெட்கள்:

ஸ்மார்ட் ட்ராஃபிக் சிக்னல் ட்ரோன் உச்சி மாநாட்டில் காட்சிப்படுத்தப்பட்ட பல சுவாரஸ்யமான கேட்ஜெட்களில் ஒன்றாகும். இதேபோல், ஒரு ரோபோ ஸ்னைப்பரும் கண்காட்சியல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

UAE ஸ்னைப்பர் என்று அழைக்கப்படும் இந்த ரோபோடிக் சாதனம் பெயிண்ட்பால்களை சந்தேகத்திற்குரிய குற்றவாளி அல்லது இடத்தில் சந்தேகத்திற்குரிய நபர் அல்லது இடம் என்பதை குறிக்க சுடும் என்றும் கூறப்படுகிறது. அஜ்மான் காவல்துறையால் உருவாக்கப்பட்ட இந்த சாதனம், மூன்று மாதங்களுக்கும் மேலாக பயன்படுத்தப்பட்டு, தற்போது 98 சதவீத துல்லியத்தைப் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது மிகவும் வெற்றிகரமாக உள்ளதாகக் கூறிய செய்தித் தொடர்பாளர், காவல்துறை அதிகாரிகளை ஆபத்தில் ஆழ்த்தும் எந்த ஆபத்தான இடங்களுக்கும் இந்த ரோபோவை அனுப்ப முடியும் என்றும், இந்த சாதனத்தை ரிமோட் மூலம் கட்டுப்படுத்த முடியும் என்றும் எடுத்துரைத்துள்ளார்.

இந்த ரோபோவில் இரண்டு கேமராக்கள் மற்றும் பேட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளன. ஒரு கேமரா வழிகாட்டியாகவும் மற்றொன்று துப்பாக்கி சுடும் கேமராவாகவும் செயல்படுகிறது. இதன் பேட்டரிகள் 58 மணி நேரம் வரை நீடிக்கும் ஆற்றல் கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல், இந்த சாதனத்தின் இரண்டாவது பதிப்பு இலக்கை விரைவாகவும் எளிதாகவும் கண்டறியும் வகையில், 360 டிகிரி கேமராவுடன் வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!