அமீரக செய்திகள்

UAE: மழை வெள்ளத்திலும் வேலைக்கு வர வற்புறுத்தும் நிறுவனங்கள்.. மறுத்தால் ‘சம்பளம் கட்’ என அச்சுறுத்துவதாக ஊழியர்கள் வேதனை..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த வார தொடக்கத்தில் இடைவிடாது பெய்த கனமழைக்குப் பிறகு, நாட்டில் உள்ள சாலைகள் மழைநீர் வெள்ளத்தால் மூழ்கின. இதனால் ஊழியர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அனைத்து அரசு மற்றும் குறிப்பிட்ட தனியார் நிறுவனங்களும் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்குமாறு அறிவிப்பை வெளியிட்டன.

இருப்பினும், சில நிறுவனங்கள் இந்த நெருக்கடிக்கு மத்தியில் தங்கள் ஊழியர்களை அலுவலகத்திற்கு வருமாறு வலியுறுத்துவதாகவும், தவறினால், ஊழியர்களுக்கு சம்பளம் குறைக்கப்படும் என்று மிரட்டல் விடுக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வரலாறு காணாத மழைப் பொழிவைத் தொடர்ந்து, பெரும்பாலான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்திருப்பதாலும், போக்குவரத்து தடுக்கப்பட்டிருப்பதாலும் அமீரக மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் கடந்த ஒரு சில நாட்களாக சிரமத்திற்குள்ளாகினர். இத்தகைய சூழலில் அலுவலகத்திற்குச் செல்வது என்பது ஊழியர்களுக்கு மிகப்பெரிய சவாலாகவே இருந்தது.

இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் சிக்கிக் கொண்ட குடியிருப்பாளர் ஒருவர் தனது அனுபவத்தை கூறுகையில், கனமழையினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு மத்தியில் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது பற்றியும், வழியில் அவர் எதிர்கொண்ட சவால்கள் பற்றியும் பகிர்ந்துள்ளார்.

வணிக பயணத்திலிருந்து திரும்பி துபாய் விமான நிலையத்தில் வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் தரையிறங்கிய அவரிடம், அலுவலகத்திற்கு வருமாறும், இல்லையெனில் ஊதியம் குறைக்கப்படும் என்றும் கூறப்பட்டிருக்கின்றது. எனவே, விமான நிலையத்திலிருந்து நேரடியாக அவர் அலுவலகம் சென்றிருக்கிறார். அப்போது தண்ணீர் தேங்கியிருந்த சாலைகளை சமாளித்து பயணிக்க வேண்டியிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக பயணம் மற்றும் சுற்றுலாத் துறையில் பணிபுரிந்து வரும் அவர், “தன்னால் வீட்டிலிருந்தே வேலையை எளிதாக நிர்வகிக்க முடியும் என்ற போதிலும், அனைத்து ஊழியர்களும் அலுவலகத்திற்கு அழைக்கப்படுகின்றனர்” என்று வேதனை தெரிவித்துள்ளார்.

மேலும் தொடர்ந்து பேசுகையில், அன்று நள்ளிரவு 1 மணிக்கு வீட்டை அடைந்ததாகவும், போதிய ஓய்வு இல்லாமல், அடுத்த நாளான வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும்  அவரது மோசமான அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார்.

அவரைப்போலவே, மற்றொரு குடியிருப்பாளர் நிறுவனத்தில் வேலைக்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதால், தண்ணீர் தேங்கிய சாலைகளில் பயணம் செல்ல வேண்டியிருந்தது என கூறியுள்ளார். அதே போல் மற்றொரு குடியிருப்பாளர் கூறுகையில், நிறுவனத்தின் அறிவுறுத்தல்களுக்கு இணங்கத் தவறினால் சம்பளம் குறைக்கப்படும் என்று ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகக் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் வீட்டிலிருந்து வேலை செய்ய அவரது மேலாளர் ஒப்புக் கொண்டதாகவும், பின்னர், நேற்று (வெள்ளிக்கிழமை) செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் வீட்டிலிருந்து வேலை செய்யத் தேர்வுசெய்த ஊழியர்கள், கூடுதல் நாட்கள் வேலை செய்வதன் மூலம் ஈடுசெய்ய வேண்டும் அல்லது நிலுவையில் உள்ள வருடாந்திர விடுப்புகளுடன் அவற்றைச் சமப்படுத்த வேண்டும் என்று செய்தி அனுப்பப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இது பற்றி HR மற்றும் ஆட்சேர்ப்பு ஆலோசனை நிறுவனமான Genie இன் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் நிக்கி வில்சன் கூறுகையில், சில வணிக நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வேலைக்கு வருமாறு கோருவதற்கான நிலைப்பாட்டை எடுத்தது உண்மைதான் என்றும், சில ஊழியர்கள் தங்கள் வீடுகளில் வெள்ளம் அல்லது மழையால் ஏற்பட்ட சேதத்தால் நிதி இழப்பை சந்தித்திருக்கலாம். எனவே, முதலாளிகள் உண்மையில் இதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், சலூன்கள், உணவகங்கள், டெலிவரி, லாஜிஸ்டிக்ஸ், சில்லறை விற்பனை மற்றும் மீட்பு தொடர்பான எதிலும் பணிபுரியும் ஊழியர்கள் தங்கள் பணிக்குத் திரும்பியுள்ளதாகக் கூறிய  வில்சன், ஊழியர்கள் அலுவலகத்தில் இருப்பது அவசியமற்றது என்றால், நிலைமை சீராகும் வரை அவர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதி அளிப்பது சிறந்தது என்றும் கூறியுள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!