அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் தற்பொழுது ஸ்டைரோஃபோம் தயாரிப்புப் பொருட்களுக்கு (styrofoam product) தடை விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், இந்தத் தடையானது எதிர்வரும் ஜூன் 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சுற்றுச்சூழல் ஏஜென்சி-அபுதாபி மற்றும் அபுதாபி பொருளாதார மேம்பாட்டுத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, இந்தத் தடையானது ஒருமுறை பயன்படுத்தக் கூடிய கப்கள், மூடிகள், தட்டுகள், குளிர்பானக் கொள்கலன்கள் மற்றும் உடனடி நுகர்வுக்கான உணவுப் பாத்திரங்களுக்கு பொருந்தும் என கூறப்பட்டுள்ளது. இருப்பினும், சில தயாரிப்புகளுக்கு இந்தத் தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பின்வரும் பொருட்களுக்கு இந்த தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது:
- மீண்டும் பயன்படுத்தக்கூடிய சேமிப்பு பெட்டிகள் (Reusable storage boxes)
- குளிரூட்டிகள் (coolers)
- மருத்துவ பயன்பாட்டிற்கான பொருட்கள்
ஒற்றை-பயன்பாடு கொண்ட ஸ்டைரோஃபோம் தயாரிப்புகளைத் தடை செய்யும் முயற்சியானது, ‘Abu Dhabi Single-Use Plastic Policy’யின் நீட்டிப்பாகும், மேலும் இது அமீரகத்தின் நிலைத்தன்மை ஆண்டின் நோக்கங்களை ஆதரிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
கடந்த மே 2020 இல் தொடங்கப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிப்பதற்கான கொள்கையின்படி, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பைகள் விற்பனைக்கான தடை ஜூன் 1, 2022 முதல் நடைமுறைக்கு வந்தது, இதனால் 95% பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு குறைந்ததாக தரவுகள் வெளியிடப்பட்டன.
அபுதாபியைப் போலவே, நாட்டில் உள்ள மற்ற எமிரேட்டுகளும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு இதேபோன்ற தடையை அமல்படுத்தியுள்ளன. ஷார்ஜாவில் ஜனவரி 1, 2024 இல் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை அறிவிக்கப்பட்டது மற்றும் ஏப்ரல் 22 அன்று ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பைகள் தயாரிப்பதை முனிசிபாலிட்டி நிறுத்தியதாக அறிவித்தது.
அதேசமயம், ஜனவரி 1, 2024 முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிப்பதாகவும், விதிமீறல்களுக்கு அதிகபட்சமாக 2,000 திர்ஹம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் துபாயில் அறிவிக்கப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கை தடை செய்வது குறித்து ஜனவரி 2023 இல் மத்திய அரசு அறிவித்ததை அடுத்து 2024 ஆம் ஆண்டு முதல் இந்த தடைகள் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel