ADVERTISEMENT

துபாயில் பறக்கும் டாக்ஸியை அறிமுகம் செய்யவுள்ள RTA..!! வசதிகளும் சிறப்பம்சங்களும் வெளியீடு..!!

Published: 11 May 2024, 3:24 PM |
Updated: 11 May 2024, 3:36 PM |
Posted By: Menaka

துபாயில் போக்குவரத்து நெரிசல் என்பது வாகன ஓட்டிகளுக்கு பெரும் சவாலாக உள்ள நிலையில், போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும், சுமூகமான மற்றும் விரைவான பயணத்தை வழங்கவும் அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது.

ADVERTISEMENT

இந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக, எமிரேட்டில் விரைவில் ஏர் டாக்ஸி சேவையைத் தொடங்க துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) தீவிரமாக வேலை பார்த்து வருகிறது. ஏற்கனவே, அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கி வரும் Joby விமான நிறுவனத்துடனான கூட்டாண்மையில் RTA கையெழுத்திட்டிருந்தது.

இந்த கூட்டாண்மையின் கீழ், 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் துபாய் மீது ஏர் டாக்ஸிகள் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அந்நிறுவனம் செய்தி ஊடகங்களுக்கு பறக்கும் டாக்ஸியின் முன்னோட்டத்தை வழங்கியுள்ளது. இதன் மூலம் துபாய்வாசிகள் இன்னும் சில வருடங்களில் போக்குவரத்து நெரிசலின்றி, வானில் இருந்து துபாயின் அழகிய காட்சிகளை ரசித்தவாறே ஏர் டாக்ஸியில் நகரம் முழுவதையும் வலம் வர முடியும்.

ADVERTISEMENT

இந்த ஏர் டாக்ஸி சேவையானது துபாயில் இரண்டு இடங்களுக்கு இடையிலான பயண நேரத்தை கிட்டத்தட்ட 70 சதவீதம் குறைக்கும் என்று ஜோபியின் செயல்பாட்டுத் தலைவர் போனி சிமி (Bonny Simi) தெரிவித்துள்ளார். அதாவது, DXB விமான நிலையத்திலிருந்து இருந்து பாம் ஜுமேராவுக்கு சாலை வழியாக பயணித்தால் சுமார் 45 நிமிடங்கள் முதல் ஒரு மணிநேரம் வரை ஆகும். ஆனால், ஏர் டாக்ஸியில் சுமார் 10 முதல் 12 நிமிடங்களில் பயணிக்கலாம் என்று அவர் விளக்கமளித்துள்ளார்.

ADVERTISEMENT

மேலும், இந்த பறக்கும் டாக்ஸியில் நான்கு பயணிகள் மற்றும் ஒரு விமானி அமரலாம் என்றும், கூடுதலாக லக்கேஜ்களுக்கும் சேமிப்பு உள்ளது என்றும் கூறிய அவர், குடியிருப்பாளர்கள் வசதியான, தொந்தரவு இல்லாத மற்றும் வசதியான பயணத்தை அனுபவிக்கலாம் என்று உறுதியளித்துள்ளார்.

அவரது கூற்றுப்படி, விமான டாக்ஸி 500 முதல் 1,000 மீட்டர் உயரத்தில் பறக்கும் போது, பயணிகள் 45 டெசிபல் சத்தத்துடன் அமைதியான பயணத்தை அனுபவிக்கலாம் என்பது தெரிய வந்துள்ளது.

இருப்பினும், ஏர் டாக்ஸி பறக்கும் உயரமானது பயண தூரத்தைப் பொறுத்தது. நீண்ட தூரத்திற்கு, விமானம் தரையில் இருந்து கிட்டத்தட்ட 1,000 மீட்டர் உயரத்தில் பறக்கும், மேலும் குறுகிய தூரத்திற்கு 500 மீட்டர் முதல் 100 மீட்டர் வரை பறக்கும் என்றும் சிமி தெரிவித்துள்ளார்.

எல்லாவற்றிற்கும் மேலாக, வணிக உரிமம் பெற்ற ஒரு பைலட், விமானத்திற்கு ஏற்றவாறு ஆறு முதல் 8 வார பயிற்சித் திட்டத்திற்குப் பிறகே பறக்கும் டாக்ஸியை இயக்குவார் என்றும், நிறுவனம் உருவாக்கும் செயலி மூலம் பயணிகள் தங்கள் விமான டாக்ஸி பயணங்களை முன்பதிவு செய்ய முடியும் என்றும் கூறியுள்ளார்.

Bonny Simi

ஏர் டாக்ஸியின் சிறப்பம்சங்கள்:

சிமி வெளியிட்ட தகவல்களின் படி, இந்த ஏர் டாக்ஸியை வெறும் 10 நிமிடங்களில் 0 முதல் 100 சதவீதம் வரை முழுமையாக சார்ஜ் செய்ய முடியும் என்பது தெரிய வந்துள்ளது. இது குறித்து சிமி கூறுகையில், ஏர் டாக்ஸி வெர்டிபோர்ட்களில் தரையிறங்கியதும், பயணிகள் இறங்குவதற்கு முன், தரை ஊழியர்கள் உடனடியாக சார்ஜிங் பிளங்கை இணைப்பார்கள். புதிய பயணிகள் ஏறியதும், விமானம் புறப்படுவதற்கு முன் பிளக்குகள் விரைவாக அகற்றப்பட்டு, பயணிகள் மாற்றங்களுக்கு இடையேயான நேரத்தில் சார்ஜிங் செயல்முறை முடிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குறிப்பிடுகையில், இதில் ஆறு ப்ரொப்பல்லர்கள் பொருத்தப்பட்டுள்ளன, ஒவ்வொன்றிலும் இரண்டு மோட்டார்கள் வீதம் 12 மோட்டார்கள் மற்றும் நான்கு பேட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளன. இது குறிப்பிடத்தக்க நிலைத்தன்மையுடன் இயங்குவதுடன் ஒரு ஹெலிகாப்டரைப் போல செங்குத்து புறப்படும் திறன்களைக் கொண்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

ஆறு ப்ரொப்பல்சன் யூனிட்களால் இயக்கப்படும் இந்த ஏர் டாக்ஸி, ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார் 160 கிமீ தூரத்தை கடக்கும் என்றும், மணிக்கு 320 கிமீ வேகத்தை விரைவாக அடையும் என்றும் கூறப்படுகிறது.

முதல் கட்டமாக, துபாய் விமான நிலையம், பாம் ஜுமேரா, துபாய் டவுன்டவுன் மற்றும் துபாய் மெரினா போன்ற துபாயின் முக்கிய மையங்களில் நான்கு வெர்டிபோர்ட்கள் கட்டப்பட உள்ளதாகவும், எதிர்காலத்தில் வானுயர் கட்டிடங்களின் மேல் வெர்டிபோர்ட்கள் அமைக்கப்படலாம் என்றும் சிமி தெரிவித்துள்ளார்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel